‘ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது’ பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


‘ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது’ பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 13 March 2020 12:15 AM GMT (Updated: 12 March 2020 7:19 PM GMT)

‘ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது’ என்று சேலத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சேலம்,

சேலத்தில், மறைந்த பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில பொதுச்ெசயலாளர் ஆடிட்டர் ரமேசின் இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதில், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூறும் பொய் பிரசாரங்களை முஸ்லிம் சகோதரர்கள் நம்பவேண்டாம். இந்த சட்டத்தால் இந்தியாவில் வாழும் ஒரு முஸ்லிம் கூட பாதிக்கப்படமாட்டார்கள். தமிழகத்தில் மத ரீதியான மோதல்களை உருவாக்க தி.மு.க.வும், காங்கிரசும் அனைவரையும் தயார்படுத்திக் கொண்டு இருக்கிறது.

வரவேற்கத்தக்கது

தமிழக அமைச்சர்களை பா.ஜ.க. மிரட்டி வைத்துள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்தை ஒருபோதும் ஏற்கமுடியாது. யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு கிடையாது. தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியாக இருந்தபோது, ஆ.ராசா, டி.ஆர்.பாலு ஆகியோர் நடுங்கி கொண்டு தான் இருந்தார்களா?. தமிழகத்திற்கு துரோகம் செய்வது தி.மு.க., காங்கிரஸ் கட்சியை தவிர வேறு கட்சிகள் கிடையாது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் வரவேற்கத்தக்கது. அவர் பா.ஜனதாவில் இணைய வேண்டும் என்பதே அனைவருடைய விருப்பம். ஆனால் தனிக்கட்சி என்று கூறும்போது, இந்த தருணம் சரியாக இருக்காது. 1996-ம் ஆண்டில் ரஜினிகாந்த் செய்த தவறு தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் உட்கார வைத்தது. அப்போது அவர் ஆதரவு கொடுத்து ஒருவரை முதல்-அமைச்சராக ஆக்க முடியும் என நிரூபித்து காட்டியவர். தமிழகத்தின் பா.ஜ.க. தலைவராக முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தகுந்த நேரத்தில் தலைமை நியமித்துள்ளது.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Next Story