ஏலச்சீட்டு நடத்தி ரூ.20½ லட்சம் மோசடி 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் ஜெயில் நெல்லை கோர்ட்டு தீர்ப்பு


ஏலச்சீட்டு நடத்தி ரூ.20½ லட்சம் மோசடி  3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் ஜெயில்  நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 13 March 2020 10:00 PM GMT (Updated: 13 March 2020 2:21 PM GMT)

ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்த வழக்கில் 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

நெல்லை, 

ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்த வழக்கில் 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ரூ.20 லட்சம் மோசடி 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லத்தாய்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 55). இவர் பாவூர்சத்திரத்தை தலைமையிடமாக கொண்டு இளைஞர் நற்பணி மன்றம் என்ற பெயரில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

இந்த மன்றத்தில் சிவத்தையாபுரத்தை சேர்ந்த செல்வகனி என்பவர் செயலாளராகவும், பாலபிரஜாதிபதி என்பவர் உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தனர். இவர்கள் கடந்த 2010–ம் ஆண்டு பாவூர்சத்திரம், சிவத்தையாபுரம், கிருஷ்ணபேரி, செல்லத்தாய்புரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்களிடம் ஏலச்சீட்டு வசூல் செய்தனர்.

வாரம் ரூ.250, ரூ.300 என வசூல் செய்தனர். பலருக்கு சீட்டு முதிர்ச்சி அடைந்த பிறகும் பணத்தை திரும்ப தரவில்லை. இளைஞர் மன்றத்தில் பணம் செலுத்திய 25 பேர் கடந்த 2014–ம் ஆண்டு நெல்லை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில், பிரபாகரன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து ரூ.20 லட்சத்து 60 ஆயிரத்து 900 மோசடி செய்தது தெரியவந்தது.

தலா 2 ஆண்டுகள் ஜெயில் 

இந்த வழக்கு நெல்லை மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரவிசங்கர் நேற்று தீர்ப்பு கூறினார். பிரபாகரன், செல்வகனி, பாலபிரஜாதிபதி ஆகிய 3 பேருக்கு தலா 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் ரஞ்சிதராஜ் ஆஜராகி வாதாடினார். 

Next Story