கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பீதி: முட்டை விலை ஒரே நாளில் 33 காசுகள் சரிவு


கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பீதி: முட்டை விலை ஒரே நாளில் 33 காசுகள் சரிவு
x
தினத்தந்தி 15 March 2020 12:00 AM GMT (Updated: 14 March 2020 8:31 PM GMT)

நாமக்கல் மண்டலத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி மற்றும் பறவைகாய்ச்சல் பீதி காரணமாக முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 33 காசுகள் சரிவடைந்து 290 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 323 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 33 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 290 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு சரிவடைந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:- சென்னை-300, ஐதராபாத்-275, விஜயவாடா-324, மைசூரூ-341, மும்பை-350, பெங்களூரு-335, கொல்கத்தா-347, டெல்லி-305.

கறிக்கோழி கிலோ 46-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

பண்ணையாளர்கள் கவலை

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி மற்றும் பறவை காய்ச்சல் பீதி காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விற்பனை கடும் சரிவை சந்தித்து உள்ளது. எனவே முட்டைகள் தேங்குவதை தவிர்க்க அதன் கொள்முதல் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந் தேதி முட்டை கொள்முதல் விலை 302 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு முட்டை கொள்முதல் விலை 290 காசுகள் என்ற நிலைக்கு சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

Next Story