கலப்பு திருமணம் செய்த இளம்பெண் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் ஆஜர் அரசியல் கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு


கலப்பு திருமணம் செய்த இளம்பெண் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் ஆஜர் அரசியல் கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 March 2020 12:15 AM GMT (Updated: 14 March 2020 9:15 PM GMT)

கலப்பு திருமணம் செய்த இளம்பெண் மேட்டூர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு அரசியல் கட்சியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டூர்,

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் செல்வம் (வயது 25). பி.எஸ்சி. பட்டதாரி. பவானி குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருடைய மனைவி சாந்தி. இவர்களது மகள் இளமதி (23). பி.காம். பட்டதாரி. பவானி அருகே உள்ள ஒரு தனியார் மில்லில் செல்வமும், இளமதியும் வேலை பார்த்தார்கள். அப்போது பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுடைய காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து இருவரும் சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த காலாண்டியூர் வந்து திராவிடர் விடுதலை கழக நிர்வாகி ஈஸ்வரன் என்பவரிடம் தஞ்சம் அடைந்தனர். பின்னர் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த இளமதியின் பெற்றோர், உறவினர்கள் காலாண்டியூர் சென்று கலப்பு திருமணம் செய்து வைத்ததாக கூறி ஈஸ்வரனையும், இளமதியின் காதலன் செல்வத்தையும் தாக்கினர். அங்கிருந்து இளமதியை அழைத்து சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த ஈஸ்வரனும், செல்வமும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

போலீஸ் நிலையத்தில் ஆஜர்

இதுதொடர்பாக இளமதியின் பெற்றோர், உறவினர்கள் உள்பட 18 பேரை கொளத்தூர் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் இளமதி திடீரென்று மாயமானார். அவர் எங்கே உள்ளார்? என்பது குறித்து தெரியாமல் இருந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் தகவல் பரவியது. இதற்கிடையே தனது மனைவியை மீட்டு தரும்படி செல்வம் கொளத்தூர் போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து இளமதியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் இளமதி மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வக்கீலுடன் ஆஜரானார். இது பற்றி தகவல் அறிந்ததும் பாட்டாளி மக்கள் கட்சியினர், திராவிடர் விடுதலை கழகத்தினர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேட்டூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் மற்றும் போலீசார் அங்கு குவிந்திருந்த கட்சி நிர்வாகிகளை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.

தாயாருடன் அனுப்பினர்

தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் ஆஜரான இளம்பெண் இளமதியிடம், போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் திராவிடர் விடுதலை கழக ஈரோடு மாவட்ட தலைவர் நார்த்திகர் ஜோதி அங்கு வந்து, போலீஸ் துணை சூப்பிரண்டு சவுந்தர்ராஜனிடம் இளம்பெண்ணை சந்தித்து பேச அனுமதி கேட்டார். அதற்கு அவர் அனுமதி அளித்தார். பின்னர் வெளியே வந்த நார்த்திகர் ஜோதி, நிருபர்களிடம் கூறும் போது, இளம்பெண் இளமதி தனது பெற்றோரிடம் செல்வதாக கூறி உள்ளார் என்று தெரிவித்து விட்டு சென்றார்.

இரவு 8.30 மணி வரை நடந்த விசாரணைக்கு பிறகு, இளமதியை அவரது தாயாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், கலப்பு திருமணம் செய்ததாக கூறப்பட்ட இளமதி திடீரென்று மாயமானார். அவர் இன்று (நேற்று) போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தனது பெற்றோருடன் செல்வதாக கூறினார். இதைத்தொடர்ந்து அவரது தாயாருடன் அனுப்பி வைத்தோம் என்றனர்.

4 பேர் மீது வழக்கு

இந்தநிலையில் சாந்தி, மகள் இளமதியுடன் கடந்த 10-ந் தேதி பவானி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், ’என்னுடைய மகள் எங்கும் செல்லவில்லை. மாயமாகவும் இல்லை. என்னுடன்தான் இருக்கிறார். ஆனால் பெரியார் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி, செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். மேலும் கடந்த 9-ந் தேதி இவர்கள்தான் என்னிடம் கத்தியை காட்டி என் மகள் இளமதியை மேட்டூருக்கு கடத்தி சென்றார்கள்’ என்று கூறி இருந்தார். அதன்பேரில் பவானி போலீசார் நேற்று கொளத்தூர்மணி, ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சரவணபரத், செல்வம் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story