பள்ளிகள் விடுமுறை குறித்து முதல்-அமைச்சர் நாளை அறிவிப்பார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி


பள்ளிகள் விடுமுறை குறித்து முதல்-அமைச்சர் நாளை அறிவிப்பார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
x
தினத்தந்தி 14 March 2020 11:30 PM GMT (Updated: 14 March 2020 10:37 PM GMT)

பள்ளிகள் விடுமுறை குறித்து முதல்-அமைச்சர் நாளை (திங்கட்கிழமை) அறிவிப்பார் என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு,

ஈரோட்டில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை நேற்று திறந்து வைத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசால் செய்யப்பட்ட சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மகளிர் தினத்தை முன்னிட்டு நாகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை பெண்களுக்கு வழங்கினார். நடப்பு ஆண்டில், பல்வேறு துறை சார்பில் மகளிருக்கு ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பில் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடக்க பள்ளிக்கூடங்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படவில்லை. இதற்கான முறையான அறிவிப்பை நாளை மறுநாள் (அதாவது நாளை) முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு ஊழியர்கள் போராட்டம்

அதைத்தொடர்ந்து ‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 17-பி நோட்டீசை விலக்கி கொள்ள வலியுறுத்தி, விரைவில் போராட்டம் நடத்த உள்ளதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்’ என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘அமைதி காப்போம்’ என்று கூறினார்.

இந்த பேட்டியின்போது சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி, ராஜாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தார்.

Next Story