உப்பிலியபுரம் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு


உப்பிலியபுரம் அருகே ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 16 March 2020 12:00 AM GMT (Updated: 15 March 2020 6:43 PM GMT)

உப்பிலியபுரம் அருகே ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

உப்பிலியபுரம்,

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் கணேசன் (வயது 65). இவர் வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சத்யபாமா(60). கடந்த வாரம் சென்னையில் உள்ள தனது மகனை பார்க்க கணேசன் தனது மனைவியுடன் சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை கணேசனின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த அக்கம், பக்கத்தினர், இதுபற்றி அவருக்கும், உப்பிலியபுரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். மேலும் தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

திருட்டு

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. இதையடுத்து போலீசார் விசாரணையில், பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு போயிருந்ததும், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச்சென்றதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story