மேல்வி‌ஷாரத்தில், சாலையோர தடுப்பு சுவரில் வேன் மோதி 4 பேர் சாவு - டிரைவர் கைது


மேல்வி‌ஷாரத்தில், சாலையோர தடுப்பு சுவரில் வேன் மோதி 4 பேர் சாவு - டிரைவர் கைது
x
தினத்தந்தி 15 March 2020 11:00 PM GMT (Updated: 15 March 2020 6:55 PM GMT)

மேல்வி‌ஷாரத்தில் சாலையோர தடுப்பு சுவரில் வேன் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆற்காடு,

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே மேல்வி‌ஷாரம் கிராமம் ஹாஜிபேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கரிமுல்லா (வயது 19), துபேல் (19), அலீம் (20), சையத்பீ (20), இம்ரான் (21), முபாரக் (20), இதயத்துல்லா (20), ஆரிப் (18), முகமது ‌ஷாஜித் (21), சையத் (21) உள்பட 13 பேர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் 13 பேரும் லோடு வேனில் ஆற்காடு அருகே விளாப்பாக்கம் பகுதிக்குட்பட்ட பஞ்சபாண்டவர் மலைக்கு சென்றனர். வேனை ஆரிப் ஓட்டினார். நள்ளிரவு 2 மணியளவில் அங்கிருந்து வேனில் மேல்வி‌ஷாரத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

கத்தியவாடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பின்பக்கம் இருந்த அனைவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். முன்பக்கம் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி கூச்சலிட்டனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் வேகமாக சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களையும், வேனில் இருந்து தூக்கி வீசப்பட்டவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் அவர்களை பரிசோதனை செய்தபோது கரிமுல்லா, துபேல், அலீம், சையத்பீ ஆகிய 4 பேர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தில் வேன் டிரைவர் ஆரிப் காயமின்றி தப்பினார். மேலும் படுகாயம் அடைந்த 8 பேர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ஆரிப்பை கைது செய்தனர்.

சாலை விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் மேல்வி‌ஷாரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story