மின்வாரியத்தில், முதற்கட்டமாக கேங் மேன் பணிக்கு 5 ஆயிரம் பேர் தேர்வு அமைச்சர் தங்கமணி பேட்டி


மின்வாரியத்தில், முதற்கட்டமாக கேங் மேன் பணிக்கு 5 ஆயிரம் பேர் தேர்வு அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 16 March 2020 12:00 AM GMT (Updated: 15 March 2020 8:54 PM GMT)

மின்வாரியத்தில் கேங் மேன் பணிக்கு முதற்கட்டமாக 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

குமாரபாளையம்,

மேட்டூர் கிழக்குகரை கால்வாய் பாசனம் மூலம் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 27 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்தநிலையில் கால்வாயின் பக்க பகுதிகளில் தண்ணீர் கசிவு ஏற்படுவதால் கடைமடை பாசன நிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியவில்லை. இதையொட்டி குமாரபாளையம் பகுதிகளில் கிழக்குகரை கால்வாயை புனரமைக்க ரூ.5 கோடியே 35 லட்சம் ஒதுக்கப்பட்டு கால்வாயில் 31,400 மீட்டர் முதல் 45,300 மீட்டர் வரை தண்ணீர் கசிவு உள்ள கரைபகுதிகளை கான்கிரீட் சுவர் எழுப்பி பலப்படுத்தப்பட உள்ளது.

குமாரபாளையம் பகுதியில் கால்வாயின் வலதுகரையில் 1,000 மீட்டர் நீளத்திற்கும், இடதுகரையில் 900 மீட்டர் நீளத்திற்கும் பக்கச்சுவர் கட்டப்பட உள்ளது. கீழ்மட்ட சுரங்கப்பாதைக்கு மேல் கால்வாய் படுகை 200 மீட்டர் நீளத்திற்கும் கான்கிரீட் படுகையாக மாற்றப்பட உள்ளது. மேலும் இருகரைகளையும் மண் கொட்டி பலப்படுத்தவும், புதிய மதகுகள் கட்டும் பணிகளும் நடைபெற உள்ளது.

பூமிபூஜை

இந்தநிலையில் குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை ஊராட்சியில் கிழக்குகரை கால்வாய் புனரமைக்கும் பணிக்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில் உள்ளாட்சி மன்ற தலைவர்கள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர், கூட்டுறவாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி

முன்னதாக குமாரபாளையத்தில் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மின்வாரியத்தில் கேங் மேன் தேர்வை எழுத 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு கொடுத்து உள்ளோம். மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக 5 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 2-வது அலகு பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 3, 4-வது அலகு பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு மின்உற்பத்தி தொடங்கும்.

எனவே கூடங்குளம் அணு மின்நிலையம் மூலம் பெறும் மின்சாரத்தை முழுமையாக தமிழகத்திற்கு வழங்கும்படி மத்திய மந்திரியிடம் கேட்டு உள்ளோம்.

ஆன்லைன் பதிவில் புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மாநில தமிழக பா.ஜ.க. தலைவர் பதவிக்கு வந்திருப்பதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story