தொழில் நஷ்டம் காரணமாக விஷமாத்திரை தின்று தந்தை-மகன் தற்கொலை: உடுமலையில் பரிதாபம்


தொழில் நஷ்டம் காரணமாக விஷமாத்திரை தின்று தந்தை-மகன் தற்கொலை: உடுமலையில் பரிதாபம்
x
தினத்தந்தி 17 March 2020 10:34 PM GMT (Updated: 17 March 2020 10:34 PM GMT)

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த தந்தை-மகன் இருவரும் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டனர்.

உடுமலை,

உடுமலையில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த தந்தை-மகன் இருவரும் விஷ மாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் உடுமலை வாசவி நகரைச் சேர்ந்தவர் ருத்ரகுமாரசாமி (வயது 65). இவரது மனைவி ரேணுகாதேவி, இவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களது மகன்கள் செந்தில்குமார் (39), சுரேஷ் குமார் (35). இதில் செந்தில்குமாருக்கு திருமணமாகி விட்டது. அவர் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்.

ருத்ரகுமாரசாமி அந்த பகுதியில் சொந்தமாக டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்து நடத்திவந்தார். அவருடன் சுரேஷ்குமாரும் சேர்ந்து டிபார்ட்மெண்ட் ஸ்டோரை கவனித்து வந்தார். இதில் அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் தங்கள் டிபார்ட்மெண்ட் ஸ்டோரை மூடிவிட்டனர். அதன்பிறகு கமிஷன் வியாபாரம் செய்து வந்தனர். அதிலும் எதிர்பார்த்த வருமானம் இல்லை.

இதற்கிடையில் சுரேஷ்குமாருக்கு திருமணம் செய்து வைப்பதற்கு பெண் பார்த்து வந்தனர். ஆனால் பொருத்தமான பெண் அமையவில்லை. இதன் காரணமாக திருமணம் நடப்பது தாமதமாகி வந்தது. வாழ்க்கையில் அடுத்தடுத்து சோதனை மேல் சோதனை ஏற்பட்டதால் இருவரும் மனமுடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ருத்ரகுமாரசாமி, அவரது மகன் சுரேஷ்குமார் ஆகிய 2 பேரும் வீட்டில் இருந்தனர். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்து தென்னை மரத்திற்கு வைக்கும் மாத்திரையை(விஷ மாத்திரை) இருவரும் சாப்பிட்டனர். அத்துடன் தாங்கள் விஷமாத்திரை சாப்பிட்டு விட்டோம் என்று செந்தில்குமாருக்கு, அவரது தம்பி சுரேஷ்குமார் செல்போனில் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உடனடியாக அங்கு விரைந்து வந்தார். பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த தனது தந்தை மற்றும் தம்பியை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு அவர்கள் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக இருவரும் கோவை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், தந்தை-மகன் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோவை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர்கள் பரிதாபமாக இறந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து செந்தில்குமார் உடுமலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் உடுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், ஏட்டு ஆனந்த் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்துகொண்ட தந்தை -மகன் இருவரது உடல்களும் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.

தந்தை-மகன் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story