பல்லடம் அருகே சாய ஆலையில் தீ விபத்து: ரூ.1½ கோடி எந்திரம் எரிந்து சேதம்


பல்லடம் அருகே சாய ஆலையில் தீ விபத்து: ரூ.1½ கோடி எந்திரம் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 17 March 2020 10:38 PM GMT (Updated: 17 March 2020 10:38 PM GMT)

பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் தனியார் சாய ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் ரூ1½ கோடி மதிப்புள்ள எந்திரம் எரிந்து சேதமானது.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் பகுதியில் ஜி.எம்.எஸ்.பிராசஸ் என்ற தனியார் சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு சாயக்கழிவுகளை புதிய தொழில்நுட்பத்தில் ஜீரோ டிஸ்சார்ஜ் என்னும் முறையில் கழிவுகளின் ஈரத்தன்மையை அகற்றும் நவீன எந்திரம் ஜெர்மன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.

இந்த எந்திரத்தின் சோதனை ஓட்டம் நேற்றுகாலை நடைபெற்றது. எந்திரத்தை இயக்கும் போது அதில் இருந்து ஆயில் சுழற்சி பகுதியிலிருந்து ஆயில் கசிவுந்துள்ளது.

இதனை கவனிக்காத பணியாளர்கள் எந்திரத்தை இயக்க முயன்றபோது அது திடீரென தீப்பிடித்து எரிந்தது. தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றபோது முடியவில்லை. இதையடுத்து பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

இந்த தீ விபத்தில் எந்திரத்தின் ஆயில் சர்க்குலேசன் பகுதி முழுவதும் தீயில் கருகியது. இதன் மதிப்பு சுமார் ரூ.1½ கோடி என அந்த நிறுவன அதிகாரி தெரிவித்தார். இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story