கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 19 March 2020 12:00 AM GMT (Updated: 18 March 2020 10:41 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்தம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் ரே‌‌ஷன்கடை பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிப கழக விற்பனையாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பணி வரன்முறை செய்யப்படாத 4 ஆயிரம் பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும், கட்டுப்பாடற்ற பொருட்களான சோப்பு, டீத்தூள், உப்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது, குடோனில் இருந்து ரே‌‌ஷன்கடைகளுக்கு பொருட்கள் வரும் போது எடை குறைந்து இருக்கக்கூடாது என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர்.

ஆனால் ஏற்கனவே அறிவித்திருந்த சிறை நிரப்பும் போராட்டத்துக்குப்பதிலாக நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று ரே‌‌ஷன்கடைகளை மூடி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக மாவட்டத்தில் உள்ள சுமார் 700 ரே‌‌ஷன்கடைகளில் 650 கடைகள் மூடியிருந்ததாக நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ரே‌‌ஷன்கடைகளுக்கு சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

ஆர்ப்பாட்டம்

வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மாயவன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட பொருளாளர் தனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

இதில் மாவட்ட இணைச்செயலாளர்கள் ஏழுமலை, அமலா, மாவட்ட துணைத் தலைவர்கள் பரசுராமன், வேல்முருகன், மாவட்ட அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செஞ்சி

இதேபோல் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் மேல்மலையனூர் பகுதியிலும் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேல்மலையனூர், செஞ்சி பகுதியில் மொத்தம் 313 ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டதாக பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சம்பத் தெரிவித்தார்.

Next Story