ஐகோர்ட்டு தீர்ப்பினை மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் நாராயணசாமி எச்சரிக்கை


ஐகோர்ட்டு தீர்ப்பினை மீறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 March 2020 11:56 PM GMT (Updated: 18 March 2020 11:56 PM GMT)

ஐகோர்ட்டு தீர்ப்பினை மீறி செயல்பட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை அரசுக்கான அதிகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பு தொடர்பாக தலைமை செயலாளர் மற்றும் அரசு செயலாளர்களை அழைத்து அறிவுறுத்தப்பட்டது. அந்த தீர்ப்பின் முக்கியமான சாராம்சமே முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பரிந்துரைப்படிதான் கவர்னர் செயல்பட வேண்டும் என்பதுதான்.

முதல்-அமைச்சர், அமைச்சர்கள் எடுத்த முடிவுகளை மாற்றவோ, நிராகரிக்கவோ கவர்னருக்கு அதிகாரம் கிடையாது. கொள்கை அடிப்படையிலான விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தால் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பலாம். அதற்காக எல்லா கோப்புகளையும் அனுப்பக்கூடாது.

தன்னிச்சையாக உத்தரவு

துறை அமைச்சர்கள் முடிவுகளை எடுக்கவேண்டும். ஜனநாயகத்தில் மக்கள் அதிகாரம்தான் உயர்ந்தது. கவர்னருக்கு என்று தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது.

கவர்னர் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு செல்லலாம். ஆனால் அதிகாரிகளை அழைத்து தன்னிச்சையாக உத்தரவு போட முடியாது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பினை கவர்னர் கிரண்பெடியும் வரவேற்று உள்ளார். ஐகோர்ட்டு தீர்ப்பினை யார் மீறி செயல்பட்டாலும் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story