கிரண்பெடி குறித்து அவதூறு பேச்சு: நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் குமரி வந்ததால் பரபரப்பு


கிரண்பெடி குறித்து அவதூறு பேச்சு: நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் குமரி வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 March 2020 12:30 AM GMT (Updated: 19 March 2020 8:39 PM GMT)

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் குமரி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் திரும்பி சென்றனர்.

பத்மநாபபுரம்,

பிரபல பேச்சாளரான நாஞ்சில் சம்பத் தற்போது தி.மு.க.வில் இருந்து வருகிறார். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது இவர், தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். அப்போது கடந்த ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி தவளகுப்பம் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேசினார். அப்போது புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து பேசும் போது, புதுச்சேரி கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புதுச்சேரி உள்துறை செயலாளர் சுந்தரேசன் தவளகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து நாஞ்சில் சம்பத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய முயற்சி

இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நாளை (சனிக்கிழமை) நேரில் ஆஜராகுமாறு புதுச்சேரி போலீசார் நாஞ்சில் சம்பத்துக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். கொரோனா பீதி இருப்பதால் தற்போது ஆஜராக முடியாது, காலஅவகாசம் வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் பதில் அனுப்பியதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து நாஞ்சில் சம்பத்தை கைது செய்யும் நடவடிக்கையில் புதுச்சேரி போலீசார் ஈடுபட்டனர். நாஞ்சில் சம்பத்தின் சொந்த ஊர் குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மணக்காவிளை ஆகும். மணக்காவிளையில் உள்ள வீட்டில் நாஞ்சில் சம்பத் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து புதுச்சேரி போலீசார் நேற்று காலையில் அந்த வீட்டுக்கு வந்தனர்.

வக்கீல்கள் எதிர்ப்பு

பின்னர் உங்களை கைது செய்கிறோம் என நாஞ்சில் சம்பத்திடம் தெரிவித்தனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கிடையே நாஞ்சில் சம்பத்தை கைது செய்ய புதுச்சேரி போலீசார் வந்திருப்பதாக தி.மு.க.வினருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் நாஞ்சில் சம்பத் வீடு முன்பு திரண்டனர்.

அதே சமயத்தில் தனது வக்கீல்களுடன் கலந்து பேசி உரிய பதில் சொல்வதாக போலீசாரிடம் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். இதனையடுத்து நாகர்கோவில் மாநகர தி.மு.க. செயலாளர் வக்கீல் மகேஷ் மற்றும் சில வக்கீல்கள் அங்கு வந்தனர். சம்மனை வாங்கி படித்து பார்த்தனர். பின்னர் 21-ந் தேதி வரை (அதாவது நாளை) கால அவகாசம் இருக்கும் போது, கைது செய்ய முயற்சிப்பது ஏன்? என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பரபரப்புக்கு இடையே திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான போலீசாரும் நாஞ்சில் சம்பத் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் புதுச்சேரி போலீசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போலீசார் திரும்பி சென்றனர்

பின்னர் நாஞ்சில் சம்பத்தை கைது செய்யும் நடவடிக்கையை கைவிட்டு புதுச்சேரி போலீசார் திரும்பி சென்றனர். நாஞ்சில் சம்பத்தை புதுச்சேரி போலீசார் கைது செய்ய வந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறுகையில், நான் திராவிட இயக்கத்தின் குரலாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டு இருக்கும் நிலையில், தற்போது குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் பேசி வருகிறேன். யாரும் சொல்லாத கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துரைத்து அதை அறப்போராட்டமாக நடத்தி வருகிறேன். அதனால் கடந்த ஒரு வருடத்துக்கு முன் நடந்த வழக்கு பதிவுக்கு இப்போது கைது செய்ய நினைக்கிறார்கள். இந்த மாதிரியான நடவடிக்கை மூலம் என்னை முடக்கி விட முடியாது என்றார்.


Next Story