உடுமலை பகுதி சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை


உடுமலை பகுதி சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை
x
தினத்தந்தி 19 March 2020 11:30 PM GMT (Updated: 19 March 2020 9:28 PM GMT)

உடுமலை பகுதி சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூர்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கலெக்டரின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அம்ஜத்கான், விஜயகுமார், கேசவராஜ், பாலமுருகன், லியோ, மணி, தங்கவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் உடுமலை பகுதியில் உள்ள மூணாறு செல்லும் ரோடு, அமராவதி ஒன்பதாறு சோதனை சாவடி, அமராவதி அணை, உடுமலை நகர பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஒன்பதாறு சோதனை சாவடியில் நின்று, கேரளாவில் இருந்து வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி அவர்களுக்கு நவீன கருவி மூலமாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் உணவு பொருட்கள் சரியான முறையில் கொண்டு வரப்படுகிறதா?, வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை ஆய்வு செய்தனர்.

துண்டு பிரசுரங்கள்

கேரளா செல்லும் பாதையில் உள்ள உணவகங்களில் கை கழுவுவதற்கு தேவையான கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளதா? என்றும், கை கழுவும் முறைகள் குறித்த விழிப்புணர்வு தட்டிகள் வைக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.

உணவு பாதுகாப்பு துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. உணவகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தன் சுத்தம் பேண அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

லாட்ஜ்கள், ஓட்டல்கள்

அமராவதி அணை அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மீன் விற்பனை நிலையம் ஆய்வு செய்யப்பட்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நேற்று காலை திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் உள்ள லாட்ஜ்கள், ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். லாட்ஜ்களில் தங்கும் வெளிமாநில நபர்கள், வெளிநாட்டவர்கள் பற்றிய விவரங்களை தினமும் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. அதுபோல் கிருமிநாசினி ஓட்டல்களுக்கு முன்பு வைக்கவும், கைகழுவும் முறை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.


Next Story