தஞ்சை பெரிய கோவிலில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் நந்தியெம்பெருமானுக்கு பிரதோ‌‌ஷ அபிஷேகம்


தஞ்சை பெரிய கோவிலில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் நந்தியெம்பெருமானுக்கு  பிரதோ‌‌ஷ அபிஷேகம்
x
தினத்தந்தி 22 March 2020 12:00 AM GMT (Updated: 21 March 2020 5:27 PM GMT)

கொரோனா வைரசை தடுக்க கோவில் மூடப்பட்டதையடுத்து தஞ்சை பெரியகோவிலில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் நந்திெயம்பெருமானுக்கு நேற்று பிரதோ‌‌ஷ அபிஷேகம் நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவிலில் 23 ஆண்டுகளுக்குப்பிறகு கடந்த மாதம்(பிப்ரவரி) 5-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. அதன் பின்னர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் நாள்தோறும் அதிகரித்து வந்தது.

விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. குடமுழுக்கு நடந்ததையடுத்து இந்த கோவிலில் உள்ள தெய்வங்களுக்கு எண்ணெய்க்காப்பு மற்றும் மருந்து சாத்தப்பட்டதால் 48 நாட்களுக்கு பால் அபிஷேகம் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

பால் அபிஷேகம்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து தஞ்சை பெரியகோவிலை மூட தொல்லியல் துறை உத்தரவிட்டது. அதன்படி கடந்த 18-ந் தேதி முதல் மூடப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோவிலில் வழக்கமாக நடைபெறும் 4 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கோவிலில் உள்ள நந்திெயம்பெருமானுக்கு பிரதோ‌‌ஷ வழிபாட்டின்போது பால், சந்தனம், தயிர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். ஆனால் குடமுழுக்கு நடந்த பின்னர் பால் அபிஷேகம் மட்டும் நடந்து வருகிறது.

பக்தர்களே இல்லாத பிரதோஷ அபிஷேகம்

அதன்படி நேற்று பிரதோ‌‌ஷம் என்பதால் நந்திக்கு பால் அபிஷேகம் நடந்தது. கோவில் மூடப் பட்டதால் நேற்று கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வரவில்லை. கோவில் பணியாளர்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் மட்டும் இருந்தனர்.

வழக்கமாக பிரதோ‌‌ஷ வழிபாட்டின்போது பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அதிலும் சனி பிரதோ‌‌ஷத்தின்போது வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்படும். அந்த நாளில் பெரியகோவில் பகுதியில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்படும். ஆனால் நேற்று பக்தர்களே இல்லாமல் பெரியகோவிலில் பிரதோ‌‌ஷ அபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சாரம் பிரிக்கும் பணி

பெரியகோவிலில் விமான கோபுரம், ராஜராஜன் கோபுரம், கேரளாந்தகன் கோபுரம் ஆகியவை உள்ளன. இந்த கோபுரங்களில் குடமுழுக்கு விழாவிற்காக கலசம் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்வதற்காக சாரம் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது சாரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று ராஜராஜன் கோபுரத்தில் பணிகள் நடைபெற்றன.


Next Story