கொரோனா வைரஸ் வதந்தியால் விற்பனை சரிவு: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் ஒரு முட்டை விலை ரூ.1.25


கொரோனா வைரஸ் வதந்தியால் விற்பனை சரிவு: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் ஒரு முட்டை விலை ரூ.1.25
x
தினத்தந்தி 22 March 2020 12:00 AM GMT (Updated: 21 March 2020 6:07 PM GMT)

கொரோனா வைரஸ் வதந்தியால் விற்பனை சரிவடைந்த நிலையில், நாமக்கல் கோழிப்பண்ணைகளில் ஒரு முட்டை ரூ.1.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தியால் முட்டையின் விலை கிடுகிடு என சரிவடைந்து வருகிறது. இதற்கிடையே கேரளா மற்றும் கர்நாடகாவில் பறவை காய்ச்சல் நோய் கோழிகளை தாக்கி இருப்பதும் கோழி மற்றும் முட்டை விற்பனையை மேலும் சரிவடைய செய்து உள்ளது.

ரூ.1.25-க்கு விற்பனை

எனவே முட்டை விற்பனையை அதிகரிக்க செய்ய தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கடந்த 18-ந் தேதி அதிரடியாக முட்டை கொள்முதல் விலையை 195 காசுகளாக குறைத்தது. இவ்வாறு குறைத்தாலும் முட்டையின் தேக்கம் அதிக அளவில் இருப்பதால் வியாபாரிகள் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து குறைத்தே முட்டைகளை வாங்கி செல்கின்றனர்.

பெரும்பாலான வியாபாரிகள் ரூ.1.25-க்கு முட்டைகளை வாங்கி செல்வதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முட்டைகளை 7 நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது. எனவே பண்ணையாளர்கள் கிடைக்கும் விலைக்கு முட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். சிலர் பண்ணைகளிலேயே முட்டைகளை அடுக்கி வைத்திருப்பதையும், சில பண்ணையாளர்கள் கூண்டுகளில் இருந்து முட்டைகளை எடுக்காமல் விட்டு வைத்து இருப்பதையும் பார்க்க முடிகிறது.

தேக்கம் குறைந்து உள்ளது

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தியால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை மற்றும் கோழி விற்பனை கடும் சரிவை சந்தித்து உள்ளது. எனவே முட்டை விற்பனையை அதிகரிக்க தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அதன் கொள்முதல் விலையை 195 காசுகளாக நிர்ணயம் செய்து உள்ளது. இந்த விலை 24-ந் தேதி வரை நீடிக்கும் எனவும் தெரிவித்து உள்ளது. இருப்பினும் வியாபாரிகள் பெரும்பாலான பண்ணைகளில் ரூ.1.25-க்கே முட்டைகளை வாங்கி செல்கின்றனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கொள்முதல் விலையை குறைத்ததால் விற்பனை சற்று அதிகரித்து உள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் தேக்கம் 20 கோடியில் இருந்து 10 கோடியாக குறைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே நாமக்கல் நகரில் ஒரு முட்டையை 2 ரூபாய்க்கு பண்ணையாளர்களே வாகனங்கள் மூலம் நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

Next Story