வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை: தனுஷ்கோடிக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்க வலியுறுத்தல்


வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை: தனுஷ்கோடிக்கு சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 March 2020 11:00 PM GMT (Updated: 21 March 2020 7:57 PM GMT)

வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் வருவதால் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சுற்றுலா வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ராமேசுவரம்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுலா இடங்களும், அருங்காட்சியகம், திரையரங்குகள், வணிக வளாகம் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களுக்கு பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ராமேசுவரம் கோவிலிலும் நேற்று முன்தினம் முதல் வருகிற 31-ந் தேதி வரையிலும் பக்தர்கள் 22 தீர்த்த கிணறுகளில் நீராடவும், சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய தகவல் தெரியாமல் ராமேசுவரத்திற்கு கடந்த 2 நாட்களாக வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

கோரிக்கை

இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கோவில் மூடியிருப்பதை பார்த்து கார், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்றுவிடுகின்றனர். இவ்வாறு வாகனங்கள் மூலம் வரும் சுற்றுலா பயணிகள் அரிச்சல்முனை சாலை வளைவில் கூட்டமாக கூடி விடுகின்றனர்.

ஆகவே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு எடுத்து வரும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடியும் வரையிலாவது தனுஷ்கோடி கம்பிப்பாடு மற்றும் அரிச்சல்முனை வரையிலும் செல்லும் அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள், சுற்றுலாபயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என்று ராமேசுவரம் மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story