தலைவாசலில் தாறுமாறாக ஓடிய கார் சுற்றுலா வேன் மீது மோதல் டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்


தலைவாசலில் தாறுமாறாக ஓடிய கார் சுற்றுலா வேன் மீது மோதல் டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம்
x
தினத்தந்தி 21 March 2020 11:00 PM GMT (Updated: 21 March 2020 8:45 PM GMT)

தலைவாசலில் தாறுமாறாக ஓடிய கார், தடுப்பு சுவரை தாண்டி எதிரே வந்த சுற்றுலா வேன் மீது மோதியது. இதில் டிரைவர்கள் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.

தலைவாசல்,

சேலத்தில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வேன் ஒன்று நேற்று புறப்பட்டது. சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 35) என்பவர் வேனை ஓட்டி வந்தார். இந்த வேனில் உரிமையாளரான சென்னை கொளத்தூரை சேர்ந்த மோகன் (40) என்பவரும் உடன் வந்தார்.

இந்த வேன் நேற்று மதியம் 1 மணியளவில் சேலம் மாவட்டம், தலைவாசல் ஏரிக்கரையில் வாகன எடை போடும் நிலையத்திற்கு எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் எதிர்பாராவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் அந்த கார் தேசிய நெடுஞ்சாலையின் தடுப்புச்சுவரை தாண்டி, எதிரே சென்னை நோக்கி சென்ற அந்த சுற்றுலா வேன் மீது மோதியது.

3 பேர் காயம்

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதே நேரத்தில் வேனின் முன்பகுதி சேதம் அடைந்ததுடன், அருகில் உள்ள சாலையோரத்தில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் வேனில் வந்த முருகன், மோகன் ஆகியோரும், கார் டிரைவரும் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் நொறுங்கிய காரை கிரேன் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். மேலும் காயம் அடைந்த 3 பேரும் தலைவாசலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story