தமிழக எல்லையில் வெளிமாநில வாகனங்கள் தடுத்து நிறுத்தம் எல்லைகள் மூடப்பட்டதால், போலீசார் குவிப்பு


தமிழக எல்லையில் வெளிமாநில வாகனங்கள் தடுத்து நிறுத்தம் எல்லைகள் மூடப்பட்டதால், போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 21 March 2020 10:45 PM GMT (Updated: 21 March 2020 10:07 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊத்துக்கோட்டையில் உள்ள தமிழக எல்லையில் வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. எல்லைகள் மூடப்பட்டதால் பாதுகாப்புக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊத்துக்கோட்டை,

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த அனைத்து தமிழக எல்லைகளும் மூடப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு அறிவித்தார். இந்த நிலையில், ஊத்துக்கோட்டை நகரம் தமிழக எல்லையில் உள்ளது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் ஊத்துக்கோட்டை வழியாக தான் தமிழகத்தில் நுழைந்து சென்னை மற்றும் இதர பகுதிகளுக்கு சென்று வருகின்றன.

இதையொட்டி, நேற்று காலை ஊத்துக்கோட்டையில் உள்ள தமிழக எல்லைகள் மூடப்பட்டன. வெளிமாநிலங்களிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

போலீசார் குவிப்பு

இதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், தினேஷ்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பால், காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வாகனங்கள் மூலம் நோய் பரவாமல் தடுக்கும் வண்ணம் வட்டார மருத்துவ அலுவலர் பிராபாகரன், சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோரின் தலைமையில் நோய் தடுப்பு மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமி நாசனி மருந்து தெளித்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


Next Story