நாமக்கல் : கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் ஆய்வு


கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
x
கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.
தினத்தந்தி 23 March 2020 8:09 AM GMT (Updated: 23 March 2020 8:09 AM GMT)

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் மெகராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல், 

கொரோனா வைரஸ் நோய் கண்டவர்கள் தும்மும் போதும், இருமும் போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் நோய் பரவுவதால் இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முறைகள் பற்றியும், கிருமி நாசினி தெளித்தல் பற்றியும், கைகழுவும் முறைகள் பற்றியும் நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும், வீட்டிலேயே இருக்கவேண்டும் எனவும், ஒருவருக்கொருவர் கை குலுக்குவதை தவிர்த்து கை கூப்பி கும்பிடுமாறும், ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு பேசவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

வெளியில் சென்று வந்த பிறகு சோப்பு போட்டு முறையாக கைகழுவிய பின் உணவு உண்ணுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது.

இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் பொதுமக்கள் 1077 மற்றும் 8220402437 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலமாக மருத்துவர்களை தொடர்பு கொண்டு, கொரோனா வைரஸ் குறித்து தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் பெற்று வருகிறார்கள்.

இந்த அறையில் பொதுசுகாரத்துறை மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்த நபர்களின் விவரங்கள் மற்றும் நடமாட்டத்தை விமான நிலையங்களில் இருந்து வருகின்ற தகவல்களை கொண்டும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள் குறித்த விவரங்களை கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் மூலமாக பெற்றும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தெரிவித்து, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணிகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த நபர்களின் விவரங்களை அனைத்துதுறை அலுவலர்கள் மூலமாக முழுமையாக சேகரித்து, அவர்களின் உடல்நிலையை சுகாதாரத்துறை மூலமாக பரிசோதனை செய்து கண்காணிக்க வேண்டும். இதன் மூலமாக தான் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாமக்கல் மாவட்டத்தில் ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது பேரிடர் மேலாண்மைத்துறை தாசில்தார் ராமநாதன் உள்பட பொது சுகாரத்துறை மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story