அதிராம்பட்டினம் அருகே, வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் உள்பட 2 பேர் பலி


அதிராம்பட்டினம் அருகே, வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 25 March 2020 10:00 PM GMT (Updated: 26 March 2020 4:06 AM GMT)

அதிராம்பட்டினம் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

அதிராம்பட்டினம்,

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சமுத்திரம் மகன் முத்து(வயது 18). மீனவர் குடும்பத்தை சேர்ந்தவரான இவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள சின்னத்தூர் கிராமத்தில் இருந்து திருமண நிகழ்ச்சிக்காக மணப்பெண்ணை அழைத்துக்கொண்டு 15 பேர் ஒரு வேனில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே உள்ள பள்ளப் பட்டியை நோக்கி சென்றனர்.

அதிராம்பட்டினம் வழியாக அந்த வேன் சென்றது. அப்போது அதிராம்பட்டினம் பஸ் நிலையம் அருகில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் முத்து ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. இதில் அந்த இடத்திலேயே முத்து பலியானார். வேன் படிக்கட்டில் அமர்ந்திருந்த சண்முகசுந்தரம்(39) பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் அதிராம்பட்டினம் மற்றும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனை வரும் பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள்.

இந்த விபத்து குறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story