கொரோனா பரவுவதை தடுக்க பனை ஓலையில் முககவசம் செய்து அணிந்த தொழிலாளர்கள்


கொரோனா பரவுவதை தடுக்க பனை ஓலையில் முககவசம் செய்து அணிந்த தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 30 March 2020 11:15 PM GMT (Updated: 30 March 2020 10:49 PM GMT)

கொரோனா பரவுவதை தடுக்க தொழிலாளர்கள் பனை ஓலையில் முககவசம் அணிந்து வேலை செய்தனர்.

விளாத்திகுளம், 

சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸ், உலக நாடுகளில் வேகமாக பரவியதால் பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். மனித குலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொரோனா வைரசால் இந்தியாவிலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பால், காய்கறி, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் வீதம் குறிப்பிட்ட நேரத்தில் முக கவசம் அணிந்து வெளியில் சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் முக கவசத்தின் தேவை அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூர் பகுதியில் ஏராளமான பனையேறும் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது கோடை காலத்தில் பதனீர் சீசன் தொடங்கியதால், கருப்புக்கட்டி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக, பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இதனால் ஒரு சில குடும்பத்தினரே முககவசம் அணிந்தவாறு, வெளியில் சென்று கருப்புக்கட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான தொழிலாளர்கள், பனை ஓலையாலான முககவசத்தை தயார் செய்து, அதனை பனை ஓலை மட்டை நாரால் இணைத்து, முகத்தில் அணிந்து கொள்கின்றனர்.

குளத்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த பனையேறும் தொழிலாளியான குணசேகரன் பனை ஓலையாலான முககவசத்தை தயாரித்து அணிந்து கொண்டு பனையேறும் தொழிலில் ஈடுபடுகிறார். அவருக்கு உதவியாக மனைவி முருகலட்சுமியும் பனை ஓலையாலான முககவசம் அணிந்தவாறே பதனீரை காய்ச்சி கருப்புக்கட்டி தயாரிக்கிறார். மேலும் அவர்கள் இதுபோன்று முககவசத்தை தயாரித்து மற்ற தொழிலாளர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இலவசமாக வழங்குகின்றனர்.

இதுகுறித்து பனை தொழிலாளர்கள் கூறுகையில், ‘பனை ஓலையாலான முககவசம் அணியும்போது கோடையிலும் குளிர்ச்சியாக உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸ் போன்ற நச்சு கிருமியில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்‘ என்றனர்.

Next Story