கோபியில் 1,800 குடும்பங்களை சேர்ந்த 7,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்


கோபியில் 1,800 குடும்பங்களை சேர்ந்த 7,500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 1 April 2020 12:00 AM GMT (Updated: 31 March 2020 10:36 PM GMT)

கோபியில் 1,800 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கடத்தூர், 

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உள்ளது. இதில் நேற்று முன்தினம் மட்டும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்யப்பட்டவர்கள் தங்கியிருந்த பகுதிகள், அருகில் உள்ள வீதிகள் ஆகியன தனிமைப்படுத்தப்படுகின்றன.

அதன்படி கோபிசெட்டிபாளையத்தில் கருமாயாவீதி, ராமர் எக்ஸ்டன்சன், தேர் வீதி, வாய்க்கால்ரோடு, ஜெயராம் வீதி, கிட்டாச்சாமி வீதி, முத்து மாரியம்மன் கோவில் வீதி, பெருமாள் கோவில் வீதி, கடை வீதி, அக்ரஹாரம் ஆகிய பகுதிகளை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் சென்று தனிமைப்படுத்துவதற்கான விளக்கத்தை அளித்தனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியே வராத வகையிலும், மற்ற பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு செல்ல முடியாத வகையிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதைத்தொடர்ந்து அந்த பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. துப்புரவு பணியாளர்கள் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கோபியில் குறிப்பிட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு 1,800 குடும்பங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு தேவையான தண்ணீர், காய்கறி, மருந்து போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளோம்” என்றனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஈரோடு மாநகராட்சி பகுதிகளை சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் தொடர்பு உடைய பகுதிகளை தீவிர கண்காணிப்பில் கொண்டு வரும் வகையில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் நேற்று ஈரோடு மண்டபம் வீதி பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. மரப்பாலம் முதல் வளையக்கார வீதி அருகே உள்ள வாணிப பிள்ளையார் கோவில் பகுதி வரை முற்றிலும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதுபோல் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் சில வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பகுதிகளுக்கு வெளி நபர்கள் உள்ளே செல்லவும், இங்கு இருப்பவர்கள் அத்தியாவசிய தேவை தவிர்த்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இங்கு உள்ள பொதுமக்கள் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட உள்ளனர். தேவையான பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யப்படும்.

Next Story