நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா


நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 April 2020 11:30 PM GMT (Updated: 1 April 2020 7:49 PM GMT)

நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லை,

டெல்லி நிஜாமுதீனில் சமீபத்தில் நடந்த மாநாட்டில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் இருந்து நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

அந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வந்தது.

இதில் நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 16 பேரும், பேட்டையைச் சேர்ந்த ஒருவர், வள்ளியூர் பகுதியை சேர்ந்த ஒருவரும், களக்காடு பகுதியை சேர்ந்த 3 பேரும் கலந்து கொண்டது தெரியவந்தது. மேலும் நெல்லை அருகே உள்ள தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த ஒருவரும் கலந்து கொண்டார். மொத்தம் 22 பேர் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியது தெரியவந்தது. அவர்கள் அனைவரையும் மருத்துவ குழுவினர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்தனர். அவர்களின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில், அவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் 6 பேருக்கு பாதிப்பு

இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் நெல்லை மாவட்டத்தில் இருந்து வேறுயாரும் கலந்து கொண்டார்களா? என அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் நெல்லை பேட்டையைச் சேர்ந்த 4 பேரும், களக்காடு பகுதியைச் சேர்ந்த 2 பேரும் மாநாட்டில் கலந்து கொண்டது தெரியவந்தது. அவர்களை மருத்துவ குழுவினர் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா தனிமை வார்டில் சேர்த்தனர். அவர்கள் 6 பேரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அவர்களின் குடும்பங்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

தற்போது நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 29 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 28 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள், மற்றொருவர் ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் ஆவார்.

மேலும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் கொரோனா தனிமை வார்டில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களின் சளி, ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதில் 4 பேர் டெல்லியில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்.

தூத்துக்குடியில் 2 பேர்

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 20 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று உள்ளனர். அதில் 7 பேர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். மற்றவர்கள் தொடர்ந்து டெல்லியில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்து வந்தவர்களில் செய்துங்கநல்லூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 6 பேர் குறித்த விவரங்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் சேகரித்தனர். அதே நேரத்தில் மாநாட்டுக்கு சென்று திரும்பிய சிலர் தாங்களாகவே தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.

இதனால் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ராமசாமிபுரம் மற்றும் கயத்தாறை சேர்ந்த தலா ஒருவர், காயல்பட்டினத்தை சேர்ந்த 2 பேர், பேட்மாநகரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 6 பேரையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து 6 பேரும் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு அங்கு கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனி வார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 6 பேருக்கும் ரத்த மாதிரிகள் சேரிக்கப்பட்டு ஆய்வுக்காக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில் பேட்மாநகரை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து தூத்துக்குடி ராமசாமிபுரம் பகுதியில் வெளியாட்கள் யாரும் செல்ல முடியாத வகையிலும், அங்கிருந்து வெளியில் மக்கள் வராத வகையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காயல்பட்டினம், பேட்மாநகரம், கயத்தாறு பகுதிகளிலும் வெளியாட்கள் யாரும் செல்ல முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து சாலைகளும் மூடப்பட்டு உள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து சுகாதாரத்துறையினர், உளவுப்பிரிவு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் டெல்லி சென்று வந்தவர்களுடன் நெருங்கி பழகியவர்கள், அவர்கள் எந்தெந்த பகுதிக்கு சென்று வந்தனர், யாருடன் பழகினர் என்பது குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். அவ்வாறு நெருங்கி பழகியவர்கள், அவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள அனைத்து வீடுகளில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அந்த பகுதி மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Next Story