அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய ஊழியர்கள்


அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய ஊழியர்கள்
x
தினத்தந்தி 5 April 2020 10:30 PM GMT (Updated: 5 April 2020 7:52 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை வீடு, வீடாக சென்று ஊழியர்கள் வழங்கினர்.

நெல்லை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 மற்றும் இந்த மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி அனைத்து ரேஷன் கடைகளிலும் கடந்த 1-ந் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டது. அதில், கொரோனா நிவாரண நிதி பெறும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. நாள் ஒன்றுக்கு 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2-ந் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு சில கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை.

இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடு, வீடாக சென்று நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

வீடு, வீடாக...

அதன்படி, நேற்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று ரூ.1,000 நிவாரண நிதி வழங்கும் பணியை தொடங்கினர். அப்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு டோக்கன் வழங்கப்பட்டது. அதில் எந்த தேதியில், எந்த நேரத்தில் நிவாரண பொருட்கள் ரேஷன் கடைகளில் வாங்க வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

Next Story