வாணியம்பாடியில் 2 நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் - கலெக்டர் சிவன்அருள் தகவல்


வாணியம்பாடியில் 2 நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் - கலெக்டர் சிவன்அருள் தகவல்
x
தினத்தந்தி 14 April 2020 10:30 PM GMT (Updated: 14 April 2020 10:07 PM GMT)

வாணியம்பாடியில் கொரோனா தொற்று பரவலை தடுக்க 2 நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கலெக்டர் சிவன்அருள் தெரிவித்தார்.

ஆம்பூர், 

வாணியம்பாடி பகுதியி 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் 45 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வாணியம்பாடி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் நேற்று கலெக்டர் சிவன்அருள், மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, தாசில்தார் சிவபிரகாசம், நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் மற்றும் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கலெக்டர் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஏற்கனவே ஆம்பூர் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வாணியம்பாடி நகர பகுதியில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 2 நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. வாணியம்பாடி நகரில் கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் தன்னார்வலர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும். மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து போலீஸ்சூப்பிரண்டு விஜயகுமார் கூறுகையில், முழுமையான ஊரடங்கின் போது வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இதே போல் வாகனங்களில் வருபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வேளாண் பொருட்கள் எடுத்து வரும் வாகனங்களுக்கு தடைகிடையாது என்றார்.

Next Story