சேலம் அம்மாபேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனை


சேலம் அம்மாபேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனை
x
தினத்தந்தி 19 April 2020 10:30 PM GMT (Updated: 19 April 2020 8:29 PM GMT)

சேலம் அம்மாபேட்டையில் தூய்மை பணியாளர்களுக்கு ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனை நடைபெற்றது.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 70 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள், காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், அம்மாபேட்டை மண்டலத்தில் 33, 36, 39, 43 மற்றும் 44 ஆகிய வார்டுகளில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கக் கூடிய பொதுமக்களில் காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளவர்களுக்கும், இப்பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்கள் என மொத்தம் 85 பேருக்கு நேற்று ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் ரத்த பரிசோதனை செய்யும் பணி பாவடி பெண்கள் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

இதில், பரிசோதனை செய்யப்பட்ட 85 நபர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லை என கண்டறியப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்டுள்ள பிற பகுதிகளில் காய்ச்சல் மற்றும் இருமல் உள்ள பொதுமக்கள், அப்பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பிற மருத்துவ பணியாளர்களுக்கும் ரேபிட் டெஸ்ட் கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் பார்த்திபன், சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story