கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் அதிகாரிகள் ஆய்வு


கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 23 April 2020 10:15 PM GMT (Updated: 23 April 2020 9:12 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக டாஸ்மாக் இயக்குனர் கிர்லோஸ்குமார், காவல் துறை கூடுதல் இயக்குனரும், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியத்தலைவருமான மஞ்சுநாதா ஆகியோர் சிறப்பு கண்காணிப்பு குழு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அவ்வப்போது பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், சேலம் தாதகாப்பட்டி மற்றும் மாநகர ஆயுதப்படை காவலர்கள் தங்கும் விடுதி ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் கிர்லோஸ்குமார், மஞ்சுநாதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், அவர்கள் மாநகராட்சி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளையும் பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாநகர நல அலுவலர் பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story