கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் - காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.பட்டீல் வலியுறுத்தல்


கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் - காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.பட்டீல் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 April 2020 12:00 AM GMT (Updated: 25 April 2020 11:47 PM GMT)

கர்நாடகத்தில் ஊரடங்கு தளர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.பட்டீல் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு, 

காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.பட்டீல் எம்.எல்.ஏ. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும் மாநிலத்தில் கொரோனா பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் மாநிலத்தில் கர்நாடக அரசு ஊரடங்கை தளர்த்தியுள்ளது. தொழிற்சாலைகள் செயல்படவும், கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு தளர்வு ஏழைகளுக்கு எந்த பயனையும் வழங்காது. திசை மாறி சென்றுவிட்ட பொருளாதாரத்தை ஊரடங்கு தளர்வால் மட்டும் சரிசெய்துவிட முடியாது. இந்த சிறிய தளர்வால் பொருளாதாரம் மீண்டுவிடாது. அக்ரம-சக்ரம திட்டம், பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திற்கு சொந்தமான வீட்டு மனைகளை விற்பனை செய்வது, ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அனுமதி வழங்குவது போன்ற செய்திகளை நான் கவனித்தேன். இத்தகைய முடிவுகள், பணக்காரர்களுக்கு ஆதரவானது.

கொரோனா பாதிப்பு

இந்த முடிவுகள் பொருளாதார பாதிப்பில் சிக்கியுள்ள ஏழைகளுக்கு எந்த நிலையிலும் உதவாது. அரசியல்வாதிகள் வைத்துள்ள கட்டிடங்களின் வாடகை வர வேண்டும், அவர்களுக்கு பயன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இந்த தளர்வு முடிவை எடுத்துள்ளது. இத்தகைய முடிவு எடுத்து, மோசமான நிகழ்வு நடைபெற நீங்கள் (முதல்-மந்திரி) காரணமாக அமைந்து விடாதீர்கள்.

கர்நாடகத்தில் ஊரடங்கு வருகிற மே மாதம் 3-ந் தேதி வரை நீடிக்கும் என்று ஏற்கனவே மாநில அரசு அறிவித்தது. ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாக கடந்த 22-ந் தேதி திடீரென மாநில அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு பெங்களூரு உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுததிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. சமூகத்தில் கொரோனா நுழைந்துவிட்டது என்ற ஒரு கருத்து வலுவடைந்துள்ளது.

வாகனங்கள் ஓடுகின்றன

பெங்களூருலில் சிவப்பு மண்டலத்தில் கூட ஏராமளமான வாகனங்கள் ஓடுகின்றன. பெங்களூருவில் இன்று(நேற்று) ஒரு மணி நேரத்திற்கு 60 முதல் 70 ஆயிரம் வாகனங்கள் ஓடுவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குந்ை-துள்ளதாக அரசு சொல்கிறது. இது தவறான தகவல்.

மராட்டியத்தில் 95 ஆயிரத்து 210 பேர், தமிழ்நாட்டில் 65 ஆயிரத்து 977 பேர், ஆந்திராவில் 54 ஆயிரத்து 338 பேர், கேரளாவில் 21 ஆயிரத்து 334 பேர், தெலுங்கானாவில் 16 ஆயிரத்து 827 பேர், குஜராத்தில் 42 ஆயிரத்து 384 பேர், ராஜஸ்தானில் 74 ஆயிரத்து 484 பேர், மத்தியபிரதேசத்தில் 33 ஆயிரத்து 74 பேர், அரியானாவில் 17 ஆயிரத்து 582 பேர், உத்தரபிரதேசத்தில் 45 ஆயிரத்து 483 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

வாபஸ் பெற வேண்டும்

தேசிய அளவில் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஊரடங்கு தளர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு எச்.கே.பட்டீல் கூறினார்.

Next Story