காய்கறி, மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது


காய்கறி, மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 26 April 2020 2:55 AM GMT (Updated: 26 April 2020 2:55 AM GMT)

நெல்லையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி காய்கறி, மளிகை பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை, 

நெல்லையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி காய்கறி, மளிகை பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

முழு ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் சமூக பரவலாக ஏற்பட்டு விடாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. கிருமி நாசினி தெளிப்பு, மளிகை, காய்கறி கடைகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் பங்க்குகள் திறந்திருக்கும் நேரமும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாநகரங்களில் 4 நாட்கள் வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாநகரில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 3-ந்தேதியும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி இன்று காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட வேண்டும். மருந்து கடைகள், ஆஸ்பத்திரிகள் மட்டும் திறந்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் கூட்டம்

இதனால் பொதுமக்கள் நேற்று மளிகை, காய்கறி கடைகளில் குவிந்தனர். 2 நாட்களுக்கு தேவையான காய்கறி, மளிகை சாமான்களை வாங்கிச்சென்றனர். சிலர் முழு ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்படலாம் என்று கருதி ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்கினர்.

இதனால் மளிகை, காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை டவுன் பொருட்காட்சி திடல், சாப்டர் பள்ளி மைதானம், பாளையங்கோட்டை போலீஸ் குடியிருப்பு திடல், மகாராஜநகர் பூங்காக்களில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக மார்க்கெட்டுகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இறைச்சி கடைகளில்...

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் இன்று முழுஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் நேற்றே நகரில் உள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. நெல்லை டவுன் ஆர்ச் அருகே உள்ள இணைப்பு சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட இறைச்சி கடைகளிலும் மக்கள் ஏராளமானோர் வந்து இறைச்சிகளை வாங்கி சென்றனர்.

இதேபோல் பெட்ரோல் பங்க்குகளிலும் பொதுமக்கள் தங்களது மோட்டார் சைக் கிள்களுக்கு அதிகளவு பெட்ரோல் நிரப்பி சென்றனர்.


Next Story