திருச்செந்தூரில் வீட்டில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் சாவு - கழுத்து இறுகியதால் பரிதாபம்


திருச்செந்தூரில் வீட்டில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் சாவு - கழுத்து இறுகியதால் பரிதாபம்
x
தினத்தந்தி 26 April 2020 10:45 PM GMT (Updated: 26 April 2020 6:55 PM GMT)

திருச்செந்தூரில் வீட்டில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் இறந்தான். அவனது கழுத்தை சேலை இறுக்கியதால் இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் தோப்பூர் மேல தெருவைச் சேர்ந்தவர் சிவன் ராஜ் (வயது 45). தொழிலாளி. அவருடைய மனைவி வள்ளிக்கொடி. இவர்களுக்கு 2 மகள்களும், சேது (11) என்ற மகனும் உள்ளனர். சேது அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் சேது தனது வீட்டில் சேலையால் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். எதிர்பாராதவிதமாக அவனுடைய கழுத்தை சேலை இறுக்கியது. 

இதில் அவன் சிக்கி தவித்துக் கொண்டிருந்தான். அப்போது இதனை பார்த்த அவனுடைய அக்காள், உடனடியாக விறகு வெட்ட சென்ற பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

பரிதாப சாவு

இதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பதறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தனர். சேதுவை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர், சிறுவன் ஏற்கனவே பரிதாபமாக இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வீட்டில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன், கழுத்து இறுகி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story