தென்காசி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர நடவடிக்கை - சிறப்பு அதிகாரி அறிவுறுத்தல்


தென்காசி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர நடவடிக்கை - சிறப்பு அதிகாரி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 26 April 2020 11:00 PM GMT (Updated: 26 April 2020 7:05 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிறப்பு அதிகாரி கருணாகரன் அறிவுறுத்தினார்.

தென்காசி, 

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொரோனா தடுப்பு பணிகள் மண்டல சிறப்பு அதிகாரி கருணாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அதிகாரி கருணாகரன், அனைத்து துறை அலுவலர்களுடன் தனித்தனியாக அவரவர் துறையின் கீழ் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

தீவிர நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளான புளியங்குடி, குற்றாலம் அருகே உள்ள நன்னகரம், இந்திரா நகர் பகுதி ஆகிய இடங்களில் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் சமூக விலகலை பொதுமக்கள் கடைப்பிடிக்க அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும்.

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. உரிய காரணங்கள் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, நெல்லை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குற்றாலிங்கம், தென்காசி உதவி கலெக்டர் பழனிகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மரகதநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் குணசேகரன், நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் முருகவேல், துணை இயக்குனர் டாக்டர் ராஜா, புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார் சிங் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story