நேரடி கொள்முதல் நிலையங்களில் 1500 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் விவசாயிகள் கவலை


நேரடி கொள்முதல் நிலையங்களில் 1500 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 26 April 2020 10:00 PM GMT (Updated: 26 April 2020 10:00 PM GMT)

நேரடி கொள்முதல் நிலையங்களில் 1500 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கடலூர்,

திட்டக்குடி அடுத்த கொட்டாரம் மற்றும் போத்திரமங்கலம் ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆவினங்குடி, கொட்டாரம், செங்கமேடு, குடிகாடு, பட்டூர், எழுமாத்தூர், கோடங்குடி உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலத்தில் அறுவடை செய்த நெல்லை எடுத்துவந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை எடைபோடுவதற்கு ஒரே ஒரு எந்திரத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதில் கொட்டாரத்தில் கூடுதலாக மேலும் ஒரு எந்திரம் இருந்த போதிலும் அதை அவர்கள் பயன்படுத்துவதில்லை. இதனால் விவசாயிகளின் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து, ஆங்காங்கே மூட்டைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

1500 மூட்டைகள் சேதம்

இந்நிலையில், நேற்று மதியம் 12 மணிக்கு திடீரென இப்பகுதியில் பெய்த மழையில் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் நனைந்தன. உடன் விவசாயிகள் தார்ப்பாய்கள் கொண்டு மூட்டைகளை மூடி பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அவைகள் நனைந்து விட்டன. பின்னர் மழை ஓய்ந்ததும், மூட்டைகளில் இருந்த நெல்லை கொட்டி காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இதில் 2 நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் சேர்த்து மொத்தம் சுமார் 1500-க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Next Story