கோவையில் காய்கறி, மளிகை கடைகள் திறப்பு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்


கோவையில் காய்கறி, மளிகை கடைகள் திறப்பு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 30 April 2020 11:09 PM GMT (Updated: 30 April 2020 11:09 PM GMT)

கோவை மாநகரில் 4 நாள் முழு ஊரடங்கு நிறைவடைந்ததை தொடர்ந்து, காய்கறி, மளிகை கடைகள் திறக்கப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவை,

கொரோனா பரவலை தடுக்க ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்தது. இதை தடுக்க ஊரடங்கை கடுமையாக்க முடிவெடுத்த தமிழக அரசு, சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் கடந்த 26-ந்தேதி முதல் 29-ந் தேதிவரை 4 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியது.

இதனால் கோவை நகரில் 33 சோதனைச்சாவடிகளும் அடைக்கப்பட்டன. மாவட்ட எல்லை பகுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மாநகர பகுதியில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டன. மருந்துக்கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இந்த உத்தரவால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். முழு ஊரடங்கிற்கு முன்பு ஏதாவது காரணத்தை கூறி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது.

கடைகளில் கூட்டம்

இந்தநிலையில் 4 நாட்கள் முழு ஊரடங்கு நேற்று முன்தினம் இரவு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை காய்கறி, மளிகைகடைகள் மற்றும் பேக்கரி கடைகள் திறக்கப்பட்டன. 4 நாட்களுக்கு பிறகு கடைகள் திறப்பதால் கூட்டம் அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காக நேற்று ஒரு நாள் மட்டும் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை அத்தியாவசிய பொருட்களை சமூக இடைவெளிவிட்டு வாங்கிக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.

இதைத்தொடர்ந்து கோவையில் காலை 6 மணிமுதலே காய்கறிகள், மளிகை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது கோவை காந்திபுரம் பஸ்நிலையம், உக்கடம் பஸ்நிலையம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மார்க்கெட்டுகளில் ஏராளமானோர் திரண்டனர்.

போக்குவரத்து நெரிசல்

கோவை சாய்பாபாகாலனியில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக சந்தையில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் நேற்று சந்தைக்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். மேலும் வியாபாரிகளும் காய்கறிகளை தரையில் வைத்து விற்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அங்கு சமூக இடைவெளியை பொதுமக்கள் யாரும் கடைப்பிடிக்கவில்லை. இதனால் மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அப்போது அங்கு பாதுாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஒலிபெருக்கி மூலம் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இதேபோல் ஒப்பணக்கார வீதி, பெரியக்கடை வீதி, ரங்கே கவுடர் வீதிகளில் உள்ள மளிகைக்கடைகளில் மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களில் நேற்று காலை முதலே வரத்தொடங்கினார்கள். இதனால் அந்தப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அங்கும் ஒருசில இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தனர். ஆனால் பல இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக இடைவெளி

குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக வட்டமிடப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச்சென்றனர். ஒரு சிலர் மட்டும் கடைகளில் முண்டியடித்தனர். அவர்களையும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

சாலையோரங்களில் புதிதாக முளைத்த காய்கறி கடைகள் மற்றும் பழக்கடைகளிலும் பொதுமக்கள் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்சென்றனர். இறைச்சிக்கடைகளிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதில் ஆட்டு இறைச்சி கிலோவுக்கு ரூ.800-ம், கோழி இறைச்சி ரூ.220-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Next Story