பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள் டிரைவர்கள் அவதி


பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள் டிரைவர்கள் அவதி
x
தினத்தந்தி 1 May 2020 10:58 PM GMT (Updated: 1 May 2020 10:58 PM GMT)

பொள்ளாச்சியில பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி கொள்வதால் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் ரூ.172 கோடியே 22 லட்சம் செலவில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாட்டு சந்தை பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது. இதற்கிடையில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது அனுமதி பெற்று சில பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.

பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள்

பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதை நகராட்சி அதிகாரிகள் சரி செய்தனர். மேலும் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பிறகு பள்ளத்தை மூடாமல் மண்ணை மட்டும் கொட்டி விட்டு சென்று விட்டனர். தற்போது பெய்து வரும் மழைக்கு மண் கரைந்து விட்டது.

இதனால் அந்த வழியாக வரும் சரக்கு வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி கொள்கின்றன. ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து மிளகாய் ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சிக்கு வந்த லாரி நேற்று பள்ளத்தில் சிக்கி கொண்டது. பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை மீட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்து. இதேபோன்று நேற்று முன்தினம் கார் ஒன்று சிக்கி கொண்டது. அடிக்கடி பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி கொள்வதால் டிரைவர்கள் அவதிப்படுகின்றனர்.

விபத்து ஏற்படும் அபாயம்

மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக வரும் டிரைவர்களுக்கு பள்ளம் இருப்பது தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் அந்த பகுதி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. எனவே பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, பாதாள சாக்கடை பணிக்கு நியூஸ்கீம் ரோட்டில் பள்ளம் தோண்டினர். பணிகள் முடிந்த பிறகு அந்த இடத்தில் மண்ணுடன் கற்களை கொட்டி முழுமையாக பள்ளத்தை மூட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பணிகளை இதுவரைக்கும் மேற்கொள்ளவில்லை. மேலும் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என்றனர்.

Next Story