மாவட்டத்தில் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 79 பெண்கள் பணியில் சேர்ப்பு


மாவட்டத்தில் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 79 பெண்கள் பணியில் சேர்ப்பு
x
தினத்தந்தி 3 May 2020 11:29 PM GMT (Updated: 3 May 2020 11:29 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற 79 பெண்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.

திண்டுக்கல்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கொரோனா பாதித்த பகுதிகளில் ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதையொட்டி அனைத்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ஆனால், ஒரு சில மாவட்டங்களில் போலீசார் பற்றாக்குறை உள்ளது. இதனால் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.

அதேநேரம் கடந்த ஆண்டு போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள், இளம்பெண்கள் ஊரடங்கால் பணியில் சேரமுடியாமல் உள்ளனர். எனவே, அவர்களை உடனடியாக பணியில் சேர்த்து பயிற்சி அளிக்கும்படி போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அந்தந்த மாவட்டங்களில் பணியில் சேர்க்கப்படுகின்றனர்.

79 பெண்கள் சேர்ப்பு

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 80 பெண்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைக்கப்பட்டனர். மேலும் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதில் ஒரு பெண் திருமணமாகி கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் அவர் மட்டும் விடுவிக்கப்பட்டார். மீதமுள்ள 79 பேரும் பணியில் சேர்க்கப்பட்டனர். மேலும் 79 பேருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

15 நாட்கள் பயிற்சி

இந்த 79 பேருக்கும் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் 15 நாட்கள் அடிப்படை போலீஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்தராஜ் தலைமையில் பயிற்சி நடைபெற உள்ளது. அப்போது கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் அவர்கள் அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


Next Story