அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி: ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி தகவல்


அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி: ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி தகவல்
x
தினத்தந்தி 5 May 2020 11:30 PM GMT (Updated: 5 May 2020 8:29 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவித்து உள்ளார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை திறந்து செயல்படுத்துவது, கட்டுமானம், கனிமம் மற்றும் நூற்பாலைகளை இயக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கலெக்டர் மலர்விழி தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர்கள் பிரதாப், தேன்மொழி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள், பழங்கள், பால் மற்றும் பேக்கரி பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. ஹார்டுவேர் கடைகள், சிமெண்டு மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை நகர்ப்புற பகுதிகளில் திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். கிராமப்புற பகுதிகளில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து விற்பனை மேற்கொள்ளலாம்.

செல்போன், மின்சாதன பொருட்கள், மின்மோட்டார் விற்பனை மற்றும் பழுது நீக்குதல், எலக்ட்ரிக்கல் பொருட்கள், கணினி, கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல், செருப்பு விற்பனை ஆகியவற்றை மேற்கொள்ளும் கடைகளை நகர்ப்புற பகுதிகளில் செவ்வாய்க் கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். கிராமப்புற பகுதிகளில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து விற்பனை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கடைகளில் உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இதேபோல் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை திறக்க அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் விவசாயம் சார்ந்த விதை, பூச்சிக்கொல்லி, உரக் கடைகள், கால்நடை தீவன கடைகளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்து விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. ஓட்டல்கள், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல்கள் மட்டும் வழங்கலாம். உட்கார்ந்து சாப்பிட அனுமதி இல்லை. அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சலூன்கடைகள், அழகு நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், இருசக்கர மற்றும் 4 சக்கர வாகன ஷோரூம்கள், நகை அடகு கடைகள், தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள், விளையாட்டு பொருட்கள் விற்பனை கடைகள் செயல்பட அனுமதி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story