தமிழகத்தை சேர்ந்தவர்கள் நுழைவதை தடுக்க கிராமப்புற சாலைகளுக்கும் சீல் வைப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை


தமிழகத்தை சேர்ந்தவர்கள் நுழைவதை தடுக்க கிராமப்புற சாலைகளுக்கும் சீல் வைப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 6 May 2020 2:43 AM GMT (Updated: 6 May 2020 2:43 AM GMT)

தமிழகத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் நுழைவதை தடுக்க கிராமப்புற சாலைகள் மூடப்பட்டன.

திருக்கனூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இவர்கள் புதுவைக்கு வந்தால், இங்கு நோய் தொற்று அதிகமாக பரவும் நிலை உள்ளது.

எனவே தமிழக பகுதியான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் வருவதை தடுக்கும் வகையில் மாநிலத்தின் நெடுஞ்சாலை எல்லைகள் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அத்தியாவசிய வாகனங்கள் மற்றும் மாவட்ட கலெக்டரின் அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

கிராமப்புற சாலைகள்

இந்த நிலையில் கிராமப்புற சாலைகள் வழியாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே புதுவை எல்லையில் உள்ள 81 கிராமப்புற சாலைகளை மூட அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் புதுவை - தமிழக எல்லையில் உள்ள திருக்கனூர், மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள 9 வழிகள் நேற்று மூடப்பட்டது.

சவுக்கு கட்டைகள் மற்றும் தகரத்தால் சாலைகள் அடைக்கப்பட்டது. வெளிநபர்கள் வராமலும், இங்குள்ளவர்கள் அங்கு செல்லாமல் இருக்கவும் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யநாராயணா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பாகூர்

பாகூர் பகுதியில் கங்கணாக் குப்பம், கொமந்தான்மேடு, சித்தேரி அணைக்கட்டு, சோரியாங்குப்பம், இருளன்சந்தை மதுரா, அரங்கனூர், மணமேடு, பனையடிக்குப்பம், சொர்ணாவூர் ஆகிய 9 சாலைகளை பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கரையாம்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் இரும்பு தகரம் கொண்டு 7 அடி உயரத்திற்கு அடைத்து எல்லை பகுதிகளை மூடினர். இதற்கு பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் கிருமாம்பாக்கம் போலீசார் கொரவெளிமேடு, உச்சிமேடு ஆகிய சாலைகளை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் அடைத்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் கடலூர், விழுப்புரம் பகுதியை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் வருவது தடுக்கப்பட்டுள்ளது.

Next Story