இன்று மதுவிற்பனை தொடக்கம்: டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


இன்று மதுவிற்பனை தொடக்கம்: டாஸ்மாக் கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 6 May 2020 11:30 PM GMT (Updated: 6 May 2020 5:01 PM GMT)

டாஸ்மாக் கடைகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் மது விற்பனை தொடங்க இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

ஈரோடு, 

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்தநிலையில் 7-ந்தேதி (இன்று) முதல் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. மதுக்கடைகள் இனிமேல் வேண்டாம் என்று பலதரப்பினரும் கோரிக்கை வைத்தும், அதை கண்டுகொள்ளாமல் மதுக்கடைகளை திறப்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதை முன்னிட்டு நேற்று ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடைக்கு மதுபானங்கள் வாங்க வரும் குடிமகன்கள் நெரிசல் இன்றி வரவும், சமூக இடைவெளியை பின்பற்றும் வகையிலும் சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.

ஈரோடு சம்பத்நகர், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டன. காளைமாடு சிலை பகுதியில் உள்ள எலைட் மதுவிற்பனை நிலையத்தில் தடுப்பு வேலிகள், தகர சீட்டுகளால் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு உள்ளது. மதுக்கடைகள் திறக்கப்படும் செய்தி ஏழை, நடுத்தர குடும்பத்தினரை திகைப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆனால், நீண்ட நாட்களாக குடிப்பதற்கு மது இல்லையே என்று ஏங்கிக்கொண்டு இருந்த குடிமகன்கள் உற்சாகமாக உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 203 டாஸ்மாக் கடைகளில் 150 கடைகள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story