சேலத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: டோக்கன் முறையில் மது வழங்க உத்தரவு


சேலத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: டோக்கன் முறையில் மது வழங்க உத்தரவு
x
தினத்தந்தி 6 May 2020 11:15 PM GMT (Updated: 6 May 2020 9:23 PM GMT)

சேலத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட உள்ளது. மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் 168 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படுவதையொட்டி கடை முன்பு மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ஒரு மணி நேரத்திற்கு 100 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி மது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தாலும் டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, கடைகளில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடும் பணி தீவிரமாக நடக்கிறது.

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அன்று முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மதுப்பிரியர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். இதனால் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சாராய விற்பனை அதிகரிக்க தொடங்கியது. போலீசார் தொடர்ந்து சாராய ஊறல்களை கண்டு பிடித்து அழித்து வருகின்றனர். சாராய வழக்கில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தமிழக அரசு இன்று (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்து உள்ளது. இதனால் மதுப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சேலம் மாவட்டத்தில் 216 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ள பகுதிகளில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி பாதுகாப்பான மற்ற டாஸ்மாக் கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கடந்த 2 நாட்களாக சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. அதேபோன்று சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து ஏற்கனவே கடைகளில் இருந்து காலி செய்து குடோன்களில் வைக்கப்பட்டு உள்ள மதுபானங்கள் அனைத்தும் நேற்று அந்தந்த டாஸ்மாக் கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

இதுபற்றி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் வேடியப்பன் கூறியதாவது:-

சேலம் மாநகரில் 46 கடைகள் உள்பட மாவட்டம் முழுவதும் 168 டாஸ்மாக் கடைகள் மட்டும் இன்று திறக்கப்படுகின்றன. மீதமுள்ள 48 கடைகள் கட்டுப்பாடுகள் உள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருப்பதால் அந்த கடைகள் திறக்கப்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கடைகள் முன்பு கம்பால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

மதுபாட்டில் வாங்க வருகிறவர்கள் 6 அடி இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டம் போடும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பார்கள் செயல்படாது என்பதால் கவுண்ட்டரில் மட்டுமே மது பாட்டில்கள் வழங்கப்படும். கூட்டம் அதிகமாக இருந்தால், முதலில் நிற்கும் 50 பேருக்கு டோக்கன் வழங்கி விட்டு மற்றவர்களை வெளியேற்றி மது விற்பனை செய்யப்படும். கட்டுக்கடங்காமல் கூட்டம் இருந்தால் உடனடியாக கடையை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்த கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் கோரப்பட்டு உள்ளது.

இது தவிர கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் முககவசம், கையுறை அணிந்து வியாபாரத்தை கவனிக்க வேண்டும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கையில் ‘சானிடைசர்‘ ஊற்றி உள்ளே அனுப்பி வைக்கப்படுவார்கள். சமூக இடைவெளி, பாதுகாப்பு அம்சங்களுடன் மட்டுமே கடைகளில் மது விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story