கடலூர் அருகே சாலையில் முள்வேலி அமைத்து பொதுமக்கள் போராட்டம்


கடலூர் அருகே சாலையில் முள்வேலி அமைத்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 May 2020 10:14 PM GMT (Updated: 6 May 2020 10:14 PM GMT)

கடலூர் அருகே சாலையில் முள்வேலி அமைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லிக்குப்பம்,

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந்தேதி வரை அமலில் உள்ளது. இருப்பினும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட எல்லை பகுதிகளான ரெட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம், மதலப்பட்டு, நல்லவாடு, புதுக்கடை, நல்லாத்தூர், கிளிஞ்சிக்குப்பம், கீழ் குமாரமங்கலம், சிங்கிரிகுடி, திருப்பணாம்பாக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் புதுச்சேரி மாநில எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் என அரசு அலுவலர்களும் பணியாற்றி வருகின்றனர்.

அனுமதி மறுப்பு

இந்த நிலையில் ரெட்டிச்சாவடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அரசு ஊழியர்கள், டாக்டர்கள் என அனைவரும் புதுச்சேரி மாநில பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு பணிகளை மேற்கொள்ள செல்லும்போது, புதுச்சேரி மாநில போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி புதுச்சேரி பகுதிக்குள் செல்ல அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் தொற்றுநோய் தடுப்பு பணிகள் பாதிப்பதோடு, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தமிழக எல்லை பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் புதுச்சேரி போலீசார் அந்தந்த பகுதிகளில் தடுப்பு கட்டைகள் அமைத்து பொதுமக்கள் செல்லாத வகையில் தடை செய்துள்ளனர்.

போராட்டம்

இந்த நிலையில் கடலூர் மாவட்ட அதிகாரிகள் புதுச்சேரி மாநில உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் புதுச்சேரி போலீசார் கெடுபிடிகளை தளர்த்தாமல் இருந்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் ரெட்டிச்சாவடி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி மாநில வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த நிலையில் திருப்பணாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் புதுச்சேரி மாநில பொதுமக்கள் இவ்வழியாக செல்லக்கூடாது என்று கூறி அப்பகுதியில் முள்வேலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் குவிப்பு

இதுபற்றி தகவல் அறிந்த தூக்கணாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள் திட்டவட்டமாக நாங்கள் முள்வேலியை அகற்ற மாட்டோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில மக்களிடையே மோதல் ஏற்படக் கூடிய சூழல் நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story