போலீசார் சுழற்சி முறையில் தனிமைப்படுத்தப்படுவார்கள்: போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் நடவடிக்கை


போலீசார் சுழற்சி முறையில் தனிமைப்படுத்தப்படுவார்கள்: போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்திகணேசன் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 May 2020 11:30 PM GMT (Updated: 7 May 2020 9:07 PM GMT)

கொரோனா பணியில் இருந்த போலீசாரை சுழற்சி முறையில் தனிமைப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

ஈரோடு, 

கொரோனா தடுப்பு பணியில் ஈரோடு மாவட்ட அனைத்து துறையினர் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக போலீசார் இரவு பகலாக அனைத்து பகுதிகளிலும் ரோந்து, கண்காணிப்பு, சோதனை என்று தீவிர பணியாற்றி வருகிறார்கள். கொரோனா தொற்று ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மாறாமல் இருந்ததற்கு போலீசாரின் பாதுகாப்பு பணியே காரணமாகும். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் குணம் அடைந்த போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்கள் போலீசார். அதுமட்டுமின்றி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசனை பாராட்டி வீடியோ தயாரித்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி மகிழ்ந்தார்கள்.

இந்த நிலையில் ஈரோடு மாவட்ட போலீசாருக்கு சுழற்சி அடிப்படையில் தனிமைப்படுத்துதல் என்கிற திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு அறிவித்து உள்ளார். அதன்படி ஒரு நிலையத்தில் பணியாற்றும் போலீசாரில் 3-ல் ஒரு பங்கு போலீசார் 10 நாட்கள் கட்டாய ஓய்வில் வீடுகளில் இருக்க வேண்டும் என்பதே அது.

விடுமுறை இன்றி, குடும்பத்தினரை விட்டு சாலையில் காத்துக்கிடந்த போலீசாருக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெண் போலீசார் கட்டாய வார விடுமுறை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு பெண் போலீசாரின் மனதில் இடம் பிடித்த போலீஸ் சூப்பிரண்டு இந்த கட்டாய தனிமைப்படுத்துதல் நடவடிக்கை மூலம் அனைத்து தரப்பு போலீசாரின் பாராட்டையும் பெற்று உள்ளார்.

இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் கூறும்போது, “அனைத்து போலீஸ் நிலையங்களிலும் 3-ல் ஒரு பங்கு போலீசார் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது காவல்துறை இயக்குனரின் உத்தரவு. நமது மாவட்டத்தில் இதுவரை தீவிர பணிகள் இருந்ததால் அத்தகையை நடவடிக்கை எடுக்க முடியவில்லை. தற்போது பச்சை மண்டலம் என்ற நிலைக்கு வந்து இருப்பதால் அந்த திட்டம் செயல்படுத்தப்படும். பச்சை மண்டலம் செயல்பாட்டுக்கு வந்து ஓரிரு நாட்கள் பாதுகாப்பு உள்ளிட்ட மற்ற அம்சங்கள் ஆராய்ந்து அதன் அடிப்படையில் 3-ல் ஒரு பங்கு போலீசாருக்கு தனிமைப்படுத்தும் அனுமதி வழங்கப்படும். தலா 10 நாட்கள் வீதம், சுழற்சி முறையில் போலீசார் தங்கள் குடும்பத்தினருடன் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்”, என்றார்.

Next Story