நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் பெண் உள்பட 3 பேர் கொலை


நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் பெண் உள்பட 3 பேர் கொலை
x
தினத்தந்தி 7 May 2020 10:30 PM GMT (Updated: 7 May 2020 9:25 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் கொலை செய்யப்பட்டனர்.

நெல்லை, 

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவருடைய மகன் இசக்கிமுத்து (வயது 38). தொழிலாளியான இவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு இசக்கிமுத்து அந்த பகுதியில் உள்ள வலவி அம்மன் கோவில் பகுதியில் உட்கார்ந்து இருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர்கள் இசக்கிராஜா, சுரேஷ், ஜெயராஜ் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் மதுபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் 3 பேர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இசக்கிமுத்துவிடம், அவர்கள் 3 பேரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் 3 பேரும், “எங்களை பற்றி போலீசுக்கு அடிக்கடி தகவல் கொடுப்பது நீ தான்“ என்பது தெரிந்து விட்டது என்று இசக்கிமுத்துவிடம் கூறினர். அதை அவர் மறுத்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த 3 பேரும் சேர்ந்து கீழே கிடந்த கல்லால் இசக்கிமுத்துவை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.

தகவல் அறிந்ததும் தாழையூத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள், இசக்கிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக இசக்கிராஜா, சுரேஷ், ஜெயராஜ் ஆகியோரை பிடித்து போலீசார் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் கிராமம் அய்யா கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜமணி. அவருடைய மனைவி ஜெயமணி (வயது 60). இவர்களுடைய மகன் ராஜன் (42). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு தாய் ஜெயமணியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று ராஜன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு மீண்டும் தாயாரிடம் அவர் தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த ராஜன், தனது தாய் என்றும் பாராமல் வீட்டில் கிடந்த அரிவாளால் அவரை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஜெயமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஜெயமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சையா மகன் ராஜேந்திரன் (வயது 35). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். அதே பகுதி தேரடி தெருவை சேர்ந்த மாயாண்டி மகன் முப்புலிபாண்டி. இவர்கள் இருவரும் நேற்று மதியம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்ததும் முப்புலிபாண்டியின் தம்பி மருதுபாண்டி அங்கு வந்து ராஜேந்திரனை தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த மருதுபாண்டி, மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜேந்திரனை வெட்டினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்த ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜேந்திரன் இறந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக முப்புலிபாண்டி, மருதுபாண்டி ஆகியோர் மீது அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருதுபாண்டியை கைது செய்தனர். நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story