விழுப்புரம் மாவட்டத்தில் பயிற்சி பெண் காவலர்கள் 6 பேர் உள்பட 45 பேருக்கு கொரோனா


விழுப்புரம் மாவட்டத்தில் பயிற்சி பெண் காவலர்கள் 6 பேர் உள்பட 45 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 7 May 2020 10:30 PM GMT (Updated: 7 May 2020 10:30 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் பயிற்சி பெண் காவலர்கள் 6 பேர் உள்பட 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா நோயால் 160 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தவர்கள் மற்றும் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் பயிற்சிக்கு வந்த 2-ம் நிலை பெண் காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றது.

இவர்களில் பயிற்சி பெண் காவலர்கள் 6 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் செஞ்சி, மொளசூர், புக்கிரவாரி, ஈஸ்வரகண்டநல்லூர், காட்டுநெமிலி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இவர்களை தவிர கோயம்பேடு சந்தையில் இருந்து வந்த 39 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர், டி.புதுப்பாளையம், சித்தாமூர், காந்திக்குப்பம், விழுப்புரம் அருகே உள்ள ராம்பாக்கம், கீழ்பாதி, திண்டிவனம் அருக உள்ள ஒலக்கூர், ஆட்சிப்பாக்கம், ஆலகிராமம், வி.நல்லாளம் ஆகிய கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

205 ஆக உயர்ந்தது

இதை தொடர்ந்து, அவர்கள் 45 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 89 பேரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 60 பேரும், விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் 66 பேரும் ஆக மொத்தம் 205 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர கோயம்பேட்டில் இருந்து வந்த 363 பேர் 4 மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டும், கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 1,169 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

Next Story