திருவண்ணாமலையில் இருந்து நூதன முறையில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை 5 பேர் கைது


திருவண்ணாமலையில் இருந்து நூதன முறையில் கஞ்சா கடத்தி வந்து விற்பனை 5 பேர் கைது
x
தினத்தந்தி 7 May 2020 11:16 PM GMT (Updated: 7 May 2020 11:16 PM GMT)

திருவண்ணாமலையில் இருந்து நூதன முறையில் மினி வேனில் கஞ்சா கடத்தி வந்து புதுவையில் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை வேல்ராம்பேட்டில் உள்ள தனியார் கல்லூரி அருகே மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக முதலியார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்கு வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களது ஆடையில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

நூதன முறையில்

இதனையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று உரிய முறையில் விசாரித்தனர். அதில் அவர்கள் முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்த அன்பரசன் (வயது 20), சிவகாஷ் (21), கன்னியக்கோவிலை சேர்ந்த கீர்த்திவாசன் (19) என்று தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய

விசாரணையில் திருவண்ணாமலையில் இருந்து ‘கொரோனா அவசரம்‘ என்ற வாசகத்தை மினிவேன் முன்பக்க கண்ணாடியில் ஓட்டி நூதன முறையில் கஞ்சா கடத்தி வந்து, இங்கு விற்பனை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதற்கு உடந்தையாக இருந்ததாக விஜி என்ற விஜய், மினிவேன் டிரைவர் ஜான் பாட்சா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன், மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story