டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக தி.மு.க. ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 May 2020 11:30 PM GMT (Updated: 7 May 2020 11:30 PM GMT)

மதுரை மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதூர்,

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு செய்யப்பட்டுள்ள இந்த நேரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் மதுரை அருகே வெளிச்சநத்தம் கிராமத்தில் தி.மு.க.வினர் கருப்புச் சட்டை, கருப்பு முக கவசம், கருப்பு பேட்ஜ் அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சூரியகலா கலாநிதி, மேற்கு யூனியன் தலைவர் வீரராகவன், துணைத் தலைவர் கார்த்திக் ராஜா, ஒன்றிய செயலாளர் சிறை செல்வம், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டி ஆகியோர் அவர்களது பகுதிகளில் கையில் கருப்பு கொடி ஏந்தி டாஸ்மாக் திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். கருப்பாயூரணி ஊராட்சியில் இளைஞரணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆண்டி என்ற சுரேஷ்குமார், மாவட்ட நெசவாளர் அணி வினோத், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்த் ஆகியோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஒத்தக்கடை

கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுபதி, திருமோகூர் ஊராட்சி தலைவர் அண்ணாமலை, ஒன்றிய துணைச் செயலாளர் மதிவாணன், கிழக்கு யூனியன் துணைத் தலைவர் பாலாண்டி, பொதுக்குழு உறுப்பினர் வடிவேல் முருகன், கடச்சனேந்தல் இல்லத்தில் கிழக்கு யூனியன் தலைவர் மணிமேகலை, காதக்கிணறு ஊராட்சித் தலைவர் செல்வி சேகர், மாவட்ட துணைச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேற்கு ஒன்றியம், சத்திரப்பட்டியில் முன்னாள் ஊராட்சி தலைவர் மதிவாணன், மஞ்சம்பட்டி ஊராட்சி தலைவர் பாரி, உசிலம்பட்டியில் நியாயாதிபதி, வீரபாண்டி ஊராட்சி தலைவர் சுகப்பிரியா, பொதுக்குழு ஆசை கண்ணன் மற்றும் ரகுபதி, ஆண்டார் கொட்டாரம் ஊராட்சி தலைவர் சீமான், நரசிங்கத்தில் பஞ்சாயத்து தலைவர் ஆனந்த் ஆகியோர் கருப்பு கொடியுடன் டாஸ்மாக் கடைக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமங்கலம்

மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறுகையில், அண்டை மாநிலங்களான கேரளா, பாண்டிச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில் தமிழகத்தில் திறந்திருப்பது வேதனை அளிப்பதாக கூறினார். தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், நகரச் செயலாளர் முருகன், ம.தி.மு.க நகரச் செயலாளர் அனிதா பால்ராஜ், கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த சுப்புக்காளை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருமங்கலம் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் அப்துல் ஹமீது, செயலாளர் ராஜேந்திரன், சாலையோர வியாபாரிகள் சங்க செயலாளர் பீர் முகம்மது உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

வாடிப்பட்டி

வாடிப்பட்டி பேரூர் தி.மு.க. மற்றும் தோழமை கட்சியினர் கருப்பு சட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து பேரூர் செயலாளர் பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தொடங்கி வைத்தார். இதில் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டிபட்டி இந்திரா காலனியில் ஒன்றிய செயலாளர் தமிழ்நிலவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வாடிப்பட்டி பேரூர் முழுவதும் தி.மு.க.வினர் தங்களது வீட்டின் முன்பு கருப்பு கொடி கட்டி டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

சோழவந்தான்

செல்லம்பட்டி ஒன்றியம், மம்பட்டிபட்டி கிராமத்தில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகரன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள், மாவட்ட கவுன்சிலர் ரெட்காசி கிளை செயலாளர் உள்பட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். சோழவந்தான் நகரில் நகர செயலாளர் முனியாண்டி, மாவட்ட பிரதிநிதி பேட்டை கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்பட கூட்டணி கட்சியினர் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாடிப்பட்டி ஒன்றியம், திருவேடகம் கிராமத்தில் கிளை செயலாளர் பெரிய கருப்பன், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கிளைச் செயலாளர் ராஜா, மேலக்கால் பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மன்னாடிமங்கலம் கிராமத்தில் மனோகரன், வக்கீல் முருகன், அய்யப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் மணிவேல், இரும்பாடி ஊராட்சியில் பண்ணைச்செல்வம் ஆகியோர் தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

Next Story