டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு: தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்


டாஸ்மாக் கடைகள் திறக்க எதிர்ப்பு: தி.மு.க. கூட்டணி கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 8 May 2020 1:29 AM GMT (Updated: 8 May 2020 1:29 AM GMT)

கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மதுபான கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தி.மு.க. கூட்டணி கட்சியினர் தங்களின் வீடுகளின் முன்பு கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில், டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு சட்டை அணிந்து கட்சி நிர்வாகிகள் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் தில்லைபுரத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு முன்னாள் மத்திய மந்திரி காந்திசெல்வன் கருப்பு சட்டை மற்றும் சின்னம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் நகர பொறுப்புகுழு உறுப்பினர்கள் பால்ரவி, ரமேஷ் அண்ணாத்துரை மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். இவர்கள் மதுபான கடைகளை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் மாநில, மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் தங்களின் வீடுகளின் முன்பு கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் நகர காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் சித்திக், டி.வி.பாண்டியன், குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் குழந்தான் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தம்பிராஜா முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தின்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒடுக்கப்பட்ட நபர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

ராசிபுரம்

ராசிபுரத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் அவரது வீட்டின் முன்பு கருப்பு சட்டை அணிந்து மதுபானக் கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார். அவருடன் ராசிபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.வும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கே.பி.ராமசுவாமி, மாவட்ட பொருளாளர் வக்கீல் செல்வம், ராசிபுரம் நகர செயலாளர் என்.ஆர்.சங்கர், ராசிபுரம் ஒன்றிய தி.மு.க.செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான கே.பி.ஜெகநாதன் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை போட்டனர். இவர்கள் சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கம்யூனிஸ்டு கட்சிகள்

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராசிபுரம் மாதா கோவில் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பிரதேச செயலாளர் செல்வராசு, நகர செயலாளர் சண்முகம், மாதர் சங்க தாலுகா செயலாளர் ராணி, சந்திரசேகரபுரம் கிளை செயலாளர் பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ராசிபுரம் நகர, ஒன்றிய குழு சார்பில் ராசிபுரம் வி.நகரில் நகர செயலாளர் மணிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நகர துணை செயலாளர்கள் சரவணன், சாதிக்பாட்சா, நாமக்கல் மாவட்ட குழு மீனா, நகர பொருளாளர் சலீம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ராசிபுரம் தாலுகா தலைவர் ஆர்.வேம்பு, மற்றும் மணிகண்டன், பிரபு, பயாஸ், அலாவுதீன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டி புதூரில் முன்னாள் ஊராட்சி துணைத்தலைவரும், தி.மு.க. ஊராட்சி செயலாளருமான மா.சரவணன் அவரது வீட்டின் முன்பு கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு மாநில குழு உறுப்பினர் எஸ்.மணிவேல் தலைமையில் கருப்புகொடியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, செங்கோட்டையன், செல்வராஜ், ராமலிங்கம், தங்கராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எலச்சிபாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் தங்கவேல் தலைமையில், டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story