நெல்லையில் கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்


நெல்லையில் கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 May 2020 11:15 PM GMT (Updated: 8 May 2020 9:35 PM GMT)

நெல்லையில் கொரோனா விழிப்புணர்வு பிரசார வாகனத்தை, கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

கொரோனா வைரஸ் தடுப்பின் ஒரு பகுதியாக முககவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதன் தொடக்க நிகழ்ச்சி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டு வாகனங்களை தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட ஒட்டு பிரசுரங்களை சுவரில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் விழிப்புணர்வு தகவல் அடங்கிய ஒலி தொகுப்பையும் வெளியிட்டார்.

அப்போது கலெக்டர் ஷில்பா கூறுகையில், ‘நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முககவசம் அணிவதை வலியுறுத்தி பிரசார வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. காய்கறி விற்பனை செய்யும் இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

இந்த பணிகளை கண்காணிக்கவும், பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கவும் 10 பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. முககவசம் அணியாமல் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது. சமூக இடைவெளி இல்லாமல் செயல்படும் கடைகளுக்கு தடை விதிக்கப்படும். வருகிற 3, 4 மாதங்களுக்கு முககவசம் அணிவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்‘ என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story