விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள் கூட்டம்


விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 8 May 2020 10:43 PM GMT (Updated: 8 May 2020 10:43 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர இதர பகுதிகளில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. 43 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் மதுபானங்களை வாங்க ஒவ்வொரு கடையிலும் மதுப்பிரியர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது.

இவர்களை போலீசார் வரிசையில் ஒழுங்குப்படுத்தி டோக்கன் வழங்கி மதுபானங்களை வாங்க ஏற்பாடு செய்தனர். அதேபோல் சமூக இடைவெளியையும் கடைபிடிக்க அவ்வப்போது அறிவுறுத்தினர். அதனை கடை பிடிக்காதவர்களுக்கு போலீசார், லத்தியால் பாடம் புகட்டினர்.

டோக்கன்

இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. கடைகளை திறப்பதற்கு முன்பாக காலை 8 மணி முதலே குவியத்தொடங்கினர்.

இதனை தொடர்ந்து ஒவ்வொருவரிடமும் அடையாள அட்டை கேட்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது. இருப்பினும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நேற்று முன்தினம் ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் வந்த நபர்களை கணக்கில் கொண்டு அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டது. உதாரணத்திற்கு விழுப்புரம் அருகே தென்னமாதேவி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் முந்தைய நாள் 2 ஆயிரம் பேருக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் நேற்றும் அதே கடையில் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்படாமல் அவர்களை வேறு கடைகளுக்கு செல்லுமாறு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் என்பதால் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச்சென்றனர். சிலர் வெயிலை சமாளிக்க குடைபிடித்தபடியும், ஒரு சிலர் துணிகளை முக்காடுபோல் தலையில் போர்த்தியபடியும் காத்திருந்ததை பார்க்க முடிந்தது.

திண்டிவனம்

திண்டிவனம் அருகே ஆவணிப்பூர் உள்ளிட்ட சில கிராமங்களில் மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் மதுவாங்க நீண்ட வரிசையில் நின்றனர். அப்போது அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையிலான போலீசார், மதுப்பிரியர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனைவரும் குடைபிடித்த படியும், முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என தெரிவித்தனர். அதன்படி மதுப்பிரியர்கள் செயல்பட்டனர்.

டி.ஐ.ஜி. ஆய்வு

மேலும் முதல் நாள், மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் நேற்று கடைக்கு வந்த அனைவரையும் டோக்கன் கொடுத்து 1 மீட்டர் இடைவெளியில் உட்கார வைத்து பத்து, பத்து பேராக தடுப்பு கட்டைகளுக்குள் சென்று மது வாங்குவதற்கு போலீசார் ஏற்பாடு செய்தனர்.இந்நிலையில் தென்னமாதேவி டாஸ்மாக் கடையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். இதையடுத்து ஆவணிப்பூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையிலும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story