கோவை மாவட்டத்தில் தங்கியிருந்த 1,140 தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலம் புறப்பட்டு சென்றனர் - இரவு உணவு கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர்


கோவை மாவட்டத்தில் தங்கியிருந்த 1,140 தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலம் புறப்பட்டு சென்றனர் - இரவு உணவு கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 8 May 2020 11:51 PM GMT (Updated: 8 May 2020 11:51 PM GMT)

1,140 வடமாநில தொழிலாளர்களுடன் கோவையில் இருந்து பீகார் மாநிலத்துக்கு சிறப்பு ரெயில் நேற்று இரவு புறப்பட்டது.

கோவை,

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள். பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஓட்டல்கள், கட்டுமானம், ஆஸ்பத்திரி உள்பட அனைத்து இடங்களிலும் பணி செய்து வந்தனர்.

இந்த நிலையில், சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்புமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கோவை மாவட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு சிறப்பு ரெயில் வடமாநில தொழிலாளர்களுடன் ஒடிசாவுக்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் அவர்களை ஒடிசாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த மாநில கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் கோவையில் இருந்து ஒடிசா புறப்பட வேண்டிய ரெயில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில் கோவையை அடுத்த கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பேரூர் மற்றும் கோவை தெற்கு ஆகிய தாலுகாக்களில் தங்கியிருந்து வேலை செய்து வந்த வடமாநில தொழிலாளர்கள் 1,140 பேர் செல்வதற்கு சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவையில் இருந்து பீகார் மாநிலம் சாந்த்ராகாச்சி என்ற நகருக்கு செல்ல அந்த ரெயில் நேற்று மாலை 5 மணிக்கே கோவை ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடைக்கு கொண்டு வரப்பட்டது. அதில் செல்வதற்கு ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் அந்தந்த தாலுகாவிலிருந்து வருவாய்த் துறையினர் பஸ்கள் மூலம் கோவை ரெயில் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அவர்கள் சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நிற்பதற்கு வசதியாக ரெயில் நிலையம் முன்பு கயிறு கட்டப்பட்டு வட்டம் போடப்பட்டிருந்தது. அதில் வடமாநில தொழிலாளர்கள், சமூக இடைவெளிவிட்டு வரிசையில் நின்றனர். அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோத னை செய்யப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள். முகக்கவசம் இல்லாத ஒன்றிரண்டு பேருக்கு போலீசார் முகக்கவசம் அளித்தனர். மேலும் அவர்களின் உடைமைகளுக்கு கிருமி நாசினி தெளித்து அவர்கள் ரெயிலில் ஏற அனுமதிக்கப்பட்டனர். ரெயில் பெட்டிகள் ஏற்கனவே கிருமிநாசினியால் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. சிறப்பு ரெயில் மாலை 5.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வடமாநில தொழிலாளர்களை ரெயில் நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்கள் ஒவ்வொருவரையும் தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தும், டிக்கெட்டுகளை சரிபார்ப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. அந்த பணிகள் முடிவடைந்ததும் சிறப்பு ரெயில் நேற்று இரவு 8.30 மணிக்கு புறப்பட்டது. அவர்களை கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, போலீஸ் கமிஷனர் சுமித்சரண் மற்றும் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

கோவையில் இருந்து சிறப்பு ரெயில் புறப்படுகிறது என்று தகவல் தெரிந்து நூற்றுக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கோவை ரெயில் நிலையம் முன்பு திரண்டனர். இதுபற்றி தகவல் தெரிந்ததும் கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து கலைந்து செல்லுமாாறு ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். சிறப்பு ரெயிலில் யார்-யார் செல்கிறார்கள் என்று ஏற்கனவே பெயர் பதிவு செய்தவர்கள் மட்டுமே ரெயிலில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பெயர் பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை. மற்றவர்கள் கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் அறிவித்ததின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து கோவை ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவையில் இருந்து பீகாருக்கு 24 பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் சென்னை, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கட்டாக் வழியாக நாளை(ஞாயிற்றுக்கிழ மை) மாலை 5 மணிக்கு பீகார் மாநிலம் சாந்த்ராகாச்சி நகரை சென்றடையும். ரெயிலில் ஏறும்போது அனைவருக்கும் இரவு சாப்பாடு வழங்கப்பட்டது. இந்த ரெயில் வழியில் எங்கும் நிற்காது. ஆனால் ரெயிலில் செல்பவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ரெயிலிலேயே வழங்கப்படும். 1,140 பேருக்க ான டிக்கெட் கட்டணத்தையும் கோவை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை ரெயில் நிலையத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு பீகாருக்கு மற்றொரு சிறப்புரெயில் புறப்படுகிறது.

Next Story